லாரன்ஸ் சார்.. நீங்க பேசுனது தப்பு.. எப்படி விளக்கினாலும்.. தப்புதான்!
ராகவா லாரன்சின் விளக்கம் ஏற்க தயாராக இல்லை என கமல் ரசிகர்கள் கூறுகின்றனர்
சென்னை: ரஜினி விழாவில் தேவையில்லாமல் கமல்ஹாசனை இழுத்ததோடு இல்லாமல் அவரது போஸ்டரில் சாணி அடித்தேன் என்றும் இயக்குநர் - நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. என்னதான் அவர் விளக்கம் அளித்தாலும், லாரன்ஸ் பேசியது தப்பு என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதை விட மிகப் பெரிய ஆச்சரியம்.. தனது உற்ற நண்பர் கமல்ஹாசனை லாரன்ஸ் இவ்வாறு பேசியதற்கு ரஜினி உடனடியாக கண்டனம் தெரிவிக்காமல் அமைதி காத்தது... இதுவும் தப்புதான்!!
இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய அடையாளம் என்றால் அது கமல்ஹாசன்.. அதில் ரஜினிக்கு கூட எந்த சந்தேகமும் இல்லை. ரஜினியும் சரி, கமலும் சரி திரையில்தான் எதிரிகளாக பார்க்கப்பட்டார்களே தவிர.. திரைக்குப் பின்னர் தோள் மேல் தோள் போட்டு பேசும் நல்ல நண்பர்களாக வலம் வருபவர்கள்.
ஆனால் இவர்களுக்கு இடையில் புகுந்து குட்டையைக் குழப்பும் கும்பல்தான் அதிகம். இதை கமல்ஹாசனே அதிக முறை சொல்லியுள்ளார். அப்படிப்பட்டவர்களில் ஒருவராக லாரன்ஸ் போன்றோர் உருவெடுத்திருப்பது ஆச்சரியம் இல்லைதான். லாரன்ஸ் பேச்சுக்கு விளக்கம் கொடுத்து விட்டாலும் கூட இதுதொடர்பாக நமக்கு பல கேள்விகள் எழுகின்றன.
கமலின் திடீர் முடிவு.. கொஞ்சமும் எதிர்பார்க்காத ஸ்டாலின்.. உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு சிக்கல்!
கமல்ஹாசன்
ரஜினிக்கான மேடை இது.. ரஜினி விழா இது.. ரஜினி பட விழா இது.. இப்படிப்பட்ட விழாவில் ஏன் கமல்ஹாசனை இழுக்க வேண்டும்.. அதற்கான நிர்ப்பந்தம் என்ன.. அவசியம் என்ன.. கமல்ஹாசனுக்கும் இந்த விழாவுக்கும் தொடர்பே இல்லை.. அப்படிப்பட்ட நிலையில் லாரன்ஸ் ஏன் கமல்ஹாசனை போட்டு பிராண்டினார்.. இது ஒரு கேள்வி.
நடிகர் விழா
கமல் - ரஜினி ரசிகர்களைப் பற்றி உலகுக்கே தெரியும்.. அவர்கள் பீக்கில் இருந்தபோது இருவரது ரசிகர்களும் எப்படியெல்லாம் மோதிக் கொண்டாரக்ள். திட்டிக் கொண்டார்கள் என்பது உலகம் அறிந்தது. இரு நடிகர்களுக்கும் அவர்கள் வைத்த பட்டப் பெயர்கள், அதை வைத்துத் திட்டிக் கொண்டதும் உலகம் அறியும்.. ஏன் ரஜினி, கமலுக்குமே கூட நன்றாகத் தெரியும். அப்படி இருக்கையில் ஒரு நடிகரின் விழாவில் கலந்து கொண்ட அந்த மேடையில் வைத்து தான் இப்படியெல்லாம் செய்தேன் என்று கூறுவது எந்த வகையான நாகரீகம் என்பது இன்னொரு கேள்வி.
அவசியம் என்ன?
கமல்ஹாசன் கலந்து கொண்ட விழாக்களில், கமலுக்கான விழாக்களில், கமல்ஹாசன் மட்டுமே தொடர்புடைய விழாக்களில் கலந்து கொண்ட எந்த திரையுலகைச் சேர்ந்த ஒருவரும், குறிப்பாக தீவிர கமல் ஆதரவு நடிகர்கள் யாருமே ரஜினியை தொடர்புப் படுத்தி இழிவாக பேசியதில்லை. "நான் இப்படியெல்லாம் ரஜினியை கேலி செய்தேன், அசிங்கப்படுத்தினேன், சாணி அடித்தேன்" என்றெல்லாம் யாருமே பேசியதில்லை. அதாவது கமல் மேடையில் யாரும் ரஜினியை இழிவுபடுத்தும் விதமாக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அப்படி இருக்கும்போது ரஜினி மேடையில் லாரன்ஸ் ஏன் கமலை இழுத்தார்.. இது இன்னொரு கேள்வி!!
ஆபத்தானவர்கள்
ரஜினி நல்லவர்தான்.. ஆனால் அவரைச் சுற்றிலும் ஆபத்துகளும், ஆபத்தானவர்களும்தான் இருக்கிறார்கள் என்பதுதான் அவர் மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. இதனால்தான் அவருக்கு பல முத்திரைகளும் வந்து விழுகின்றன. லாரன்ஸ், ரஜினி மேடையில் பேசிய பேச்சு இப்போது ரஜினிக்கே தேவையில்லாத தர்மசங்கடத்தைத் தான் கொடுத்திருக்கும். ஆனால் ரஜினி ஏன், லாரன்ஸை அவரது பேச்சுக்காக பகிரங்கமாக கண்டிக்கவில்லை என்ற ஆச்சரியமும் எழுகிறது.
டேமேஜ்
என்னதான் லாரன்ஸ் விளக்கம் கொடுத்தாலும், கமலை மதிக்கிறேன் என்று கூறினாலும் கூட தேவையில்லாமல் கமல் பெயரை இழுத்து சாணி அடித்ததாக பேசியது தவறு மட்டுமல்ல.. அநாகரீகமும் கூட.. இது ரஜினிக்கும் நலம் பயப்பதாக அமையாது என்பதையும் லாரன்ஸ் போன்றவர்கள் உணர வேண்டும். கமல் ஆதரவு திரைக் கலைஞர்கள் எப்படி கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்கிறார்களோ அதேபோல ரஜினி ஆதரவு திரைக் கலைஞர்களும் கட்டுப்பாட்டுக்கு மாறினால்தான் ரஜினி பெயர் டேமேஜ் ஆகாது. இந்த விஷயத்தில் கமல் தரப்பைப் பார்த்து ரஜினி தரப்பு கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே உள்ளது.