தயாநிதி மாறன் - மத்திய சென்னை திமுக வேட்பாளர்: மீண்டும் திமுக கோட்டையை வசப்படுத்துவாரா?
மத்திய சென்னை திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் தயாநிதி மாறன்.
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், முரசொலி மாறனின் இளைய மகனுமான தயாநிதி மாறன் 4-வது முறையாக மீண்டும் மத்திய சென்னையில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தவர் தயாநிதிமாறன் (53). இவர் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக முக்கிய தலைவர்களில் ஒருவருமான மறைந்த முரசொலி மாறனின் மகன் ஆவார். இவரின் தந்தைவழி பாட்டியின் தம்பி தி.மு.க தலைவரும் தமிழகத்தின் முன்னால் முதல்வரான மு.கருணாநிதி ஆவார். இவர் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.
மோடி இரும்பு மனிதர் அல்ல... கல் மனிதர்... மு.க.ஸ்டாலின் விமர்சனம்
2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்களவையில் இடம் பெற்றார்.
மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராகவும், மத்திய ஜவுளித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
இம்முறை மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளராக இவர் களமிறங்குகிறார். இதே தொகுதியில் இவர் நான்காவது முறையாக போட்டியிடுகிறார். மத்திய சென்னையைப் பொறுத்தவரை, அது திமுகவின் கோட்டையாகவே இருந்தது. 1996 முதல் 2009 வரை என தொடர்ச்சியாக 13 வருடங்கள் திமுக கையில் இருந்த தொகுதி அது. தொடர்ந்து 2004 மற்றும் 2009ம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்ற தயாநிதிமாறன், 2014ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் விஜயகுமாரிடம் தோல்வியடைந்தார்.
இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான பாமக தான் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறது. எனவே மீண்டும் தன் பலத்தை தயாநிதி மாறன் நிரூபிப்பாரா, மத்திய சென்னை மீண்டும் திமுக கோட்டையாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.