ரஜினி கட்சி அர்ஜுன மூர்த்தி முரசொலி மாறனின் ஆலோசகராக இருந்தது கிடையாது.. தயாநிதி மாறன் விளக்கம்
சென்னை: ரஜினிகாந்த் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன மூர்த்தி என்பவர் தனது தந்தை முரசொலி மாறனுடன் இணைந்து பணியாற்றியவர் என்ற தகவல் பொய்யானது என மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் விளக்கம் அளித்துள்ளார்.
புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று உறுதிபட அறிவித்தார். மேலும் தனது கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரை நியமனம் செய்தார்.
இந்த அர்ஜுன மூர்த்தி ஏற்கனவே பாஜகவில் அறிவுசார் குழுவின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர். இந்த நிலையில் அந்த பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்தார்.
இதனிடையே சில ஊடகங்களில் அர்ஜுன மூர்த்தி இதற்கு முன்பாக மறைந்த முரசொலி மாறனின் உதவியாளர் மற்றும் ஆலோசகராக இருந்ததாக செய்திகள் வெளியாகின.
There is a false news published in certain print & social media that Thiru.Ra. Arjunamurthy (ex-BJP, now with Thiru. Rajinikanth) was an associate/advisor to my late father Thiru Murasoli Maran. This is completely untrue. Requesting media to not publish such false information. 🙏
— Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran) December 4, 2020
இதுகுறித்து, தயாநிதி மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: சில நாளிதழ்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அர்ஜுன மூர்த்தி எனது தந்தை முரசொலி மாறனின் உதவியாளர் மற்றும் ஆலோசகராக இருந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இதுபோன்ற தவறான தகவல்களை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.