திமுகவிற்கு தர்மசங்கடம் ஏற்படுத்திய தயாநிதிமாறன்... பேட்டியை ரசிக்காத மு.க.ஸ்டாலின்
சென்னை: தலைமைச் செயலாளர் சண்முகம் மீது திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் முன்வைத்த பரபரப்பு குற்றச்சாட்டை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ரசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக தலைமைச் செயலாளர் தொலைக்காட்சியை பார்த்தார், சத்தத்தை குறைக்கவில்லை என சிறிய விவகாரத்தை தயாநிதி மாறன் பூதாகரமாக்கி பேசியது தேவையற்ற ஒன்று என ஸ்டாலின் கருதியுள்ளார். தொலைக்காட்சியை யார் தான் பார்ப்பதில்லை இதை எதற்கு ஒரு புகாராக கூறி, தலைமைச் செயலாளரை சந்தித்ததற்கான நோக்கத்தையும், ஒரு லட்சம் மனுக்கள் அளித்த செய்தியையும் பின்னுக்கு தள்ளி புகாரை ஊடகங்களில் முன்னுக்கு கொண்டு வந்தார்கள் என வருத்தப்பட்டிருக்கிறார் ஸ்டாலின்.
இதனிடையே டி.ஆர். பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் அளித்த புகார் குறித்து தலைமைச் செயலாளர் தரப்பில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலினை நேரடியாக தொடர்பு கொண்டு நடந்த விவரங்கள் எடுத்துக்கூறப்பட்டதாம். திமுக அளித்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கிறேன் என பல முறை தெரிவித்தும், சூழ்நிலை புரியாமல் தேதியை சொல்லுங்கள் எண்டி.ஆர்.பாலுவும், தயாநிதியும் திரும்ப திரும்ப கேட்டு சங்கடத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், தயாநிதி மாறன் பேட்டியளித்த போது ''நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா'' என ஆர்வமிகுதியில் கேட்டார். இது ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள் பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதனிடையே இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன், இந்த வார்த்தையை சுட்டிக்காட்டி நேற்றிரவு ட்வீட் வெளியிட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் மன்னிப்பு கோரி தயாநிதி மாறன் ட்வீட் வெளியிட்டார். இதற்கு காரணம் தயாநிதியை அழைத்து பேசிய ஸ்டாலின், வருத்தம் தெரிவிக்குமாறும், வார்த்தைகளில் எச்சரிக்கை தேவை எனவும் கூறியிருக்கிறார்.
தலைமைச் செயலாளர் சண்முகத்தின் மறுப்பு அறிக்கை... திமுக எம்பி டி ஆர் பாலு மீண்டும் பதில்
இதில் குறிப்பிட வேண்டிய, பேசப்பட வேண்டிய விவகாரம் என்னவென்றால், ஒன்றிணைவோம் வா மூலம் மக்களிடம் இருந்து ஒரு லட்சம் மனுக்களை பெற்று அதை அரசிடம் உரிய முறையில் திமுக ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது என்பது தான். ஆனால் இந்த செய்தி அந்த பேட்டியின் மூலம் திசைமாறிவிட்டது.