சேலத்தை விட சென்னையில் குறைந்தது கொரோனா உயிரிழப்பு.. முதல்முறையாக பெரும் மாற்றம்
சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை முதல்முறையாக 10க்குகீழ் குறைந்துள்ளது. கடந்த பல நாட்களாக 10 முதல் 20 பேர் வரை பலியாகி வந்தனர். ஆனால் முதல்முறையாக தற்போது 8 பேர் மட்டுமே மரணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 5,325 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதேநேரம் 5,363 பேர் பாதிப்பில் இருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்புடன் தமிழகத்தில் 46,249 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றால் தமிழகத்தில் 63 பேர் பலியானதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல்முறையாக சென்னையைவிட சேலத்தில் உயிரிழப்பு அதிகமாக இருந்தது. சென்னையில் 8 பேர் பலியாகி இருந்த நிலையில் அதைவிட அதிகமாக சேலத்தில் 9 பேர் பலியாகி இருந்தனர்.
திருவள்ளூரில் 7 பேரும், தஞ்சாவூரில் 5 பேரும், கடலூரில் 5 பேரும், கோவையில் 4 பேரும், திருப்பூரில் 4 பேரும், ராமநாதபுரத்தில் 3 பேரும், தேனி, திருவண்ணாமலை, நீலகிரியில் தலா 2 பேர் பலியாகி இருந்தனர்.
சென்னையில் அண்மைக்காலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்த பின்னர் முதல் முறையாக கொரோனா உயிரிழப்பு 10க்கு கீழ் குறைந்துள்ளது. சென்னை உயிரிழப்பு மட்டுமின்றி தொற்று பாதிப்பும் குறைவாகவே உள்ளது. நேற்று ஒரு நாளில் 980 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் தற்போது கொரோனா பாதிப்புடன் 9868 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பால் 3097 பேர் மரணம் அடைந்துள்ளனர்.