அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தனியார் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடும் முடிவு.. வலுக்கும் எதிர்ப்பு
சென்னை: ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கங்களை, வியாபார அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு வாடைக்கு விட தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகமானது 8 ஏக்கர் பரப்பளவில், 3.75 லட்சம் சதுர அடியில், 8 மாடிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது ஒரே நேரத்தில் இந்த நூலக வளாகத்தில் 1,280 பேர் அமரலாம்.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த நூலக கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கம், திறந்தவெளி அரங்கம், மாநாட்டு கூடம் மற்றும் புத்தக வெளியீட்டு கூடங்களை வாடகைக்கு விடுவதற்கு பொது நூலக துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கலையரங்கத்திற்கான ஒரு நாள் வாடகையாக ரூ.2,31,224 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கலாச்சார பண்பாடு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக வெளியீடுகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் நிர்ணயம் செய்யப்பட்ட ஒருநாள் வாடகை கட்டத்தில் 60% தொகை தள்ளுபடி வழங்கப்பட்டு, ஒரு நாள் வாடகையாக ரூ.92,490 அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நூலக அரங்கங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆண்டு பொதுக்கூட்டங்களை நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதே போல தனியார் விழாக்கள், நாடகங்கள், பொருட்காட்சிகள் போன்றவையும் நடத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஹா.. அமமுகவில் அடுத்த வெயிட் விக்கெட் காலி?.. தெற்கிலிருந்து வரும் ஷாக் செய்தி!
கல்வி சாராத நிகழ்ச்சிகளுக்கு வியாபார அடிப்படையில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்த அரசு எடுத்த முடிவு சமூக ஆர்லவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், அண்ணா நூற்றாண்டு நூலகமும், இங்கு அமைந்துள்ள அரங்கங்களும், கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக தான் கட்டப்பட்டது. 8 ஏக்கரில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் முழுவதுமே, கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக மட்டுமே கட்டப்பட்டது.
ஏகப்பட்ட வழக்குகள் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தான், தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகம் செயல்பட வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்ட அடிப்படை வசதிகளை கூட இன்னும் அரசு இந்த நூலகத்திற்கு முழுமையாக செய்து தரவில்லை. மேலும் ரூ.5 கோடிக்கு புத்தகங்கள் வாங்க ஒப்பந்தம் பெறப்பட்டதோடு சரி. புத்தகங்கள் இன்னும் முழுமையாக நூலகத்திற்கு வரவில்லை.
அதே போல அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மொத்தமுள்ள 197 பணியிடங்களில், சுமார் 100 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் நூலகத்தை வைத்து வருவாய் ஈட்டும் பணியில் அரசு இறங்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியில் ரூ179 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது அண்ணா நூற்றாண்டு நூலகம் 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த நூலகத்தை கோட்டூர்புரத்தில் இருந்து நுங்கம்பாக்கத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசின் நடவடிக்கைக்கு ஐகோர்ட் தடை விதித்தது
இந்நிலையில் தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை சிதைக்கும் வகையில், அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.