உபரி நீரை தான் சென்னைக்கு ரயிலில் அனுப்ப முடிவு.. வேலூர் மக்களுக்கு பாதிப்பில்லை.. அமைச்சர் தகவல்
சென்னை: தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் தலைநகர் சென்னைக்கு, ரயில் மூலம் உபரி நீரை தான் வேலூரிலிருந்து எடுத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் வீரமணி கூறியுள்ளார்.
அதிமுக தலைமையின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் மழை பெய்ய வேண்டி யாகங்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறினார். மழைக்காக நாங்கள் எடுத்திருக்கும் முயற்சி வெற்றியடையும் என அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.
மழை வேண்டி வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில், இன்று அதிமுக சார்பில் வருண யாகம் நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வீரமணி, தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதாக எதிர்கட்சியினர் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுகவினர் குடிநீர் விவகாரத்தில் கையில் எடுத்து கொண்டு தேவையில்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2011ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகுதான் வேலூர் மக்கள் காவிரி கூட்டு குடிநீரை குடித்து வருகிறார்கள். ரூ.1,250 கோடியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கூட்டு குடிநீர் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி கொடுத்தார்.
தற்போது திருப்பத்தூரில் இருந்து அரக்கோணம் வரைக்கும் உள்ள அத்தனை நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் வழியாக வருகிற அத்தனை ஊர்களும் பயன்பெறும் வகையில் இந்த கூட்டு குடிநீர் திட்டம் சிறப்பானதாக விளங்குகிறது.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தைப் பொறுத்தவரையில் அடுத்த 30 ஆண்டுகள் வரை தாக்குப்பிடிக்கும் அளவுக்குச் செயல்படுத்தபட்டிருக்கிறது. இத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகளை முதல்வர் பழனிசாமி தீவிரமாக எடுத்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். எங்கெல்லாம் குடிநீர் பிரச்சனை இருக்கிறதோ அங்கெல்லாம் நேரில் சென்று பிரச்சனையை உடனுக்குடன் தீர்த்து வருகிறோம்.
தற்போது ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தாராளமாக வருகிற உபரி நீரை தான் சென்னைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
எனவே ஜோலார்பேட்டை மற்றும் வேலூர் மக்கள் பயன்படுத்தும் தண்ணீரை சென்னைக்கு அனுப்புவதாக கூறுவது முற்றிலும் தவறான தகவல். அரசியல் காரணங்களுக்காகத் துரைமுருகன் வேலூரிலிருந்து தண்ணீர் எடுத்து செல்லப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என பேசுகிறார்
வேலூரிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுவதால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. உபரியாக உள்ள நீரை தான் சென்னைக்கு அனுப்புகிறோம் இதனை கூட தி.மு.க எதிர்க்கிறது. அவர்களின் நோக்கமும் எண்ணமும் என்னவென்றே புரியவில்லை என அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.