ஜெ. சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகி.. விரைந்து தீர்ப்பு வழங்க தீபா, தீபக் கோரிக்கை
சென்னை: ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகளிடம் தீபா, தீபக் தரப்பில் வேண்டுகோள் விடுத்தனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் உறவினர்களாக ஜெ.தீபா, தீபக் ஆகியோர் சேர்க்கப்பட்டு அவர்களும் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர்.
மேலும் வருமான வரி பாக்கி 40 கோடி ரூபாய் இருப்பதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி கிருபாகரன், அப்துல்குத்துஸ் அமர்வு தேதி குறிப்பிடாமல் கடந்த ஆகஸ்ட் 30 ம் தேதி ஒத்தி வைத்திருந்தது.
இந்நிலையில் தீபா மற்றும் தீபக் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதிகள் கிருபாகரன் முன்பு இன்று ஆஜராகி, வரும் டிசம்பர் 6 ம் தேதி ஜெயலலிதாவின் 3 ம் ஆண்டு நினைவு தினம் வர இருப்பதால் அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில்,அஞ்சலி செலுத்த வேண்டும், போயஸ் தோட்ட இல்லத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதால், இந்த வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விரைவில் தீர்ப்பு வழங்க இருப்பதாக தெரிவித்தனர்.