கிருஷ்ணர் குறித்து அவதூறு... கி.வீரமணிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது அல்ல... ஐகோர்ட்
சென்னை: இந்துக் கடவுள் கிருஷ்ணரை கி. வீரமணி அவதூறாக பேசியதாக மனுத் தாக்கல் செய்த பா.ஜ.க. நிர்வாகி அசோக்கின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.,விற்கு ஆதரவு அளிக்கும் விதமாக பிரச்சாரம் செய்த, தி.க., தலைவர் வீரமணி, இந்துக்கள் வணங்கும் தெய்வமான கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்துக்களிடம், குறிப்பாக கிருஷ்ணரை வழிபடுவோரிடம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும், கிருஷ்ணரை வழிபடும் இந்து அமைப்பினர், தி.மு.க.,வுக்கு எதிராகவும், வீரமணிக்கு எதிராகவும், போராட்டங்களை நடத்தினர். இந்த விவகாரம், தேர்தலில் எதிரொலிக்கும் என்ற அளவிற்கு சென்றது. இதனையடுத்து, புண்படும்விதமாக யார் பேசினாலும் தவறு தான் என்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்தார்.
மேலும், இந்து அமைப்பினர், பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் என, பலர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார், கி.வீரமணி மீது, ஐந்துக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சூலூர், அரவக்குறிச்சி உட்பட 4 சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
இதற்கிடையே, பாஜக நிர்வாகி அசோக் என்பவர், இந்துக் கடவுள் கிருஷ்ணரை அவதூறாக பேசிய கி. வீரமணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இன்று மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.