கனிமொழி குறித்து தரக்குறைவு விமர்சனம்.. சொந்த கட்சிக்காரருக்கு எதிராக பொங்கி எழுந்த குஷ்பு
சென்னை: பாஜகவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் திமுகவைச் சேர்ந்த கனிமொழி எம்பியை விமர்சித்து ட்விட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, கனிமொழிக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.
சொந்த கட்சியினர் வெளியிடும் கருத்துக்கள் அவதூறாக இருக்கும் பட்சத்தில் அதை கண்டிப்பதற்கு தட்டி கேட்பதற்கு குஷ்பு தயங்குவது இல்லை.
ஏற்கவே பல முறை நடந்துள்ளது. அப்படித்தான் அண்மையில் பாஜக நிர்வாகிகள் இரண்டு பேர் அடுத்தடுத்து போட்ட சர்ச்சை ட்விட்களை குஷ்பு கண்டித்துள்ளார்,
ராகுல் காந்தி விமர்சனம்
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து விலகி, பாஜகவில் சேர்ந்தார். பாஜகவில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த ராகுல்காந்தி, நாக்பூர் டவுசர் வாலாக்களால் தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது என்று கடுமையாக விமர்சித்தார்.
சோனியா காந்தி
இதனால் கோபம் அடைந்த பா.ஜனதா தகவல் தொழில் நுட்ப பிரிவை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் சோனியாவை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு விமர்சித்தார். இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிர்மல்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹசீனா சையத் தலைமையில் மகளிர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
நிர்மல் குமார் பதில்
இந்த நிலையில் சொந்த கட்சியாக இருந்தாலும் நிர்மல்குமாரின் விமர்சனத்தை குஷ்பு கடுமையாக கண்டித்தார். 'பெண்களை தரம் தாழ்ந்த வார்த்தைகள் மூலம் விமர்சிக்கும் போக்கு சரியானதல்ல' என்றார். அதற்கு நிர்மல்குமார் அளித்த பதிலில் தனது விமர்சனம் தரம் தாழ்ந்தவை அல்ல என்றார்.
தனிப்பட்ட விமர்சனம் பிடிக்காது
இதனிடையே மிகவும் தைரியமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் குஷ்பு, அதன்பிற்கு வெளியிட்ட பதிவில். நான் எனது கருத்தை தெரிவித்தேன். பதிலுக்கு பதில் என்ற ரீதியில் பதில் சொல்ல தேவையில்லை. என்னை பொறுத்தவரை தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை ஏற்க மாட்டேன். அந்த தகுதியும் கட்சி நிர்வாகிகளுக்கு கிடையாது. கட்சி, கொள்கை ரீதியாக விமர்சிக்க வேண்டும். தனிப்பட்ட விமர்சனம் எனக்கு பிடிக்காது. அரசியலில் அதை நான் கடைப்பிடிப்பவள். காங்கிரஸ், தி.மு.க. கட்சிகளில் இருந்தபோதும் இந்த மாதிரி தவறுகளை கண்டிக்க நான் தயங்கியது இல்லை. நான் காங்கிரசில் இருந்தபோது, 'பிரதமர் மோடியின் தனிப்பட்ட விசயங்களை விமர்சித்தபோதும் கண்டித்து இருக்கிறேன். தமிழிசை தமிழக பாஜக தலைவராக இருந்தபோது கட்சி ரீதியாக நான் அவரை விமர்சித்தவள். ஆனாலும் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததை நான் கண்டித்து இருக்கிறேன். அரசியல் பண்பாடு என்பது அரசியல் ரீதியாக இருக்க வேண்டும். அது தனிப்பட்ட தாக்குதலாக தரம் தாழ்ந்துவிட கூடாது என்று கூறியிருந்தார்.
|
கொதித்த குஷ்பு
இந்த கருத்த வந்த அடுத்த ஒரு நாளில், பாஜகவின் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் திமுக எம்.பி கனிமொழியை அவதூறாக தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார். இதற்கு குஷ்பு கடுமையான கண்டத்தை பதிவிட்டுள்ளார். குஷ்பு தனது ட்விட்டரில் கூறுகையில் " பெண்ணைப் பற்றி இழிவான அவமரியாதையான கருத்துகள் கண்டிக்கப்பட வேண்டும். கனிமொழி எம்.பி ஒரு பெண், ஒரு மகள், ஒரு மனைவி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவர் மரியாதைக்குரியவர். அனைத்து விதங்களிலும் அவருக்கு மரியாதைக் கொடுக்கவேண்டும்' என்று கூறியுள்ளார்.