அன்று எம்.ஜி.ஆர்.... இன்று ரஜினிகாந்த்.. திராவிட கட்சிகளை வீழ்த்த இடைவிடாத யுத்தம் நடத்தும் டெல்லி
சென்னை: தமிழகத்தில் திமுக, அதிமுக எனும் மக்கள் இயக்கங்களை வீழ்த்துவதற்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் புதிய தலைவர்களை உருவாக்கும் முயற்சிகளை டெல்லி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது திமுகவை எப்படியாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற விடாமல் தடுப்பதற்காக நடிகர் ரஜினிகாந்தை டெல்லி தமிழக அரசியலில் திணிக்கிறது.
Recommended Video
இந்திய அரசியலில் தந்தை பெரியாரின் திராவிடர் இயக்கம், டெல்லியின் மேலாதிக்கத்தை மிக கடுமையாக எதிர்த்தது. ஆனால் அது தேர்தலில் போட்டியிடாத மக்கள் இயக்கமாக மட்டுமே நின்றது. திராவிடர் இயக்கத்தின் குரலாக தேர்தல் களத்துக்கு வந்தது திமுக.
திமுக தொடங்கப்பட்ட உடனேயே தேர்தலுக்கும் வந்துவிடவில்லை. மக்களின் செல்வாக்கை படிப்படியாக பெற்று மக்களின் கருத்துகளை கேட்டு பின்னரே தேர்தல் களத்துக்கு வந்தது. திமுகவின் அடிப்படை கட்டமைப்பு வலிமையாக இருப்பதால் இன்னமும் அரசியலில் அக்கட்சி ஆழ வேரூன்றி நிற்கிறது.
கருணாநிதி அரசு
திமுகவின் வலிமையை சிதைக்க டெல்லிவாலாக்களும் அரசியல் தரகர்களும் காலந்தோறும் முயற்சிகளை மேற்கொண்டே வருகின்றனர். பேரறிஞர் அண்ணா மறைவுக்கு திமுகவின் தலைவரானார் கருணாநிதி. அண்ணாவைப் பின்பற்றி திராவிடர் பேரியக்கத்தின் ஆகப் பெரும் கொள்கைகளை சட்டமாக்குவதில் படுதீவிரமாக இருந்தார் கருணாநிதி. திமுக என்றாலே இயல்பான அலர்ஜியோடு இருக்கும் டெல்லி சும்மா, கருணாநிதியின் அன்றைய திராவிட தீவிரவாத போக்கு கண்டு சும்மாதான் இருக்குமா என்ன?
தனிக்கட்சி எம்ஜிஆர்
தற்போது போல சிலபல மிரட்டல்களுக்கு நடுவே கருணாநிதியின் சகாவான எம்.ஜி.ஆரையே களத்தில் இறக்கிவிட்டது டெல்லி. எம்.ஜிஆர். எடுத்த எடுப்பிலேயே தனிக்கட்சி தொடங்கி திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற முடிவோடு களத்துக்கும் வரவில்லை. தனிக்கட்சி தொடங்குவதற்காக எம்ஜிஆரை டெல்லி பாடாய்படுத்தியது. இதற்காக எம்ஜிஆரின் மனதை கரைக்க அன்றும் ஏராளமான தமிழருவி மணியன்கள் இருந்தனர். இதன்விளைவாகவே டெல்லியின் கடும் நெருக்கடியால்தான் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கினார்.
இப்படியும் வரலாறு
கருணாநிதியின் மீது வெறுப்பு கொண்டவராக மட்டுமே எந்த ஒரு நிர்பந்தத்துக்குமே அடிபணியாமல் தாமே சுயமாக கட்சி தொடங்கியவராக எம்ஜிஆர் இருந்திருந்தால் 1970களின் இறுதியில் திமுகவும் அதிமுகவும் ஒன்று சேர வேண்டும் என்ற முயற்சிக்கு பச்சைக் கொடி காட்டியிருக்கமாட்டார் எம்ஜிஆர் என்கிற வரலாற்றையும் நினைவில் கொள்ள வேண்டும். எந்த டெல்லியால் தமது கட்சி உடைக்கப்பட்டதோ எந்த டெல்லி சர்க்காரால் தமது பிள்ளை உள்ளிட்ட தளகர்த்தர்கள் அவசரநிலை பிரகடனத்தால் வேட்டையாடப்பட்டார்களோ அதே டெல்லியோடு கருணாநிதி கை குலுக்கி சமரசமாகிப் போனது திராவிடர் இயக்கத்தில் துயரமான வரலாறும் கூட.
அதிமுகவில் கலகக் குரல்
இதன்பின்னரும் டெல்லி சும்மா இருந்துவிடவில்லை. எம்ஜிஆரின் வலிமையை புரிந்து கொண்ட டெல்லி அசைக்க முடியாத சக்தி அதிமுக என்பதை உணர்ந்து கொண்ட டெல்லி இடைவிடாமல் தமது தோழமை கட்சியாக வைத்துக் கொண்டது. அதிமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்த கையோடு எத்தனையோ முறை அதிமுகவின் முதுகில் குத்தி அந்த கழகத்தை கலகலக்க வைக்கவும் முயன்றது டெல்லி. எம்ஜிஆரின் மரணத்துக்குப் பின்னர்தான் டெல்லியால் இதனை சாதிக்கவும் முயன்றது. ஆனால் டெல்லிக்கு தேவை என்கிற சூழலில் ஒருங்கிணைந்த அதிமுக உதயமானது. அப்போதும் அரசியல் களத்தில் டெல்லி எதிராக இருந்தது திமுக.
திமுகவில் மீண்டும் பிளவு
இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரத்தை வைத்து திமுக அரசாங்கத்தை சுப்பிரமணியன் சுவாமிகளும் எம்.கே.நாராயண்களும் படுத்தியபாடு ஆட்சி கலைப்பு வரை போனது. அன்றைய தமிழக அரசு ஈழப் போராளிகள் தொடர்பான நிலை குறித்து டெல்லி எழுதிய கடிதங்களைப் படித்தாலே எப்படியான அக்னி குண்டத்தில் கருணாநிதியை அமர்த்தி வைத்திருந்தார்கள் என்பதை உணரவும் முடியும். பின்னர் அதே டெல்லி உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் திமுக இன்னொரு பிளவையும் சந்தித்தது திராவிடர் இயக்கத்தில் மற்றொரு துயரமான அத்தியாயம்.
திமுகவுக்கு எதிராக ரஜினிகாந்த்
இப்போது தமிழகத்தில் அரசியல் ஆளுமைகளாக இருந்த ஜெயலலிதாவும் கருணாநிதியும் மறைந்த பின்னர் தமிழகத்தில் இனி திமுக ஆட்சி என்கிற யதார்த்த நிலை உருவாகி உள்ளது. இதை தவிடுபொடியாக்கவே அதிமுகவை இப்போது டெல்லி கைப்பற்றி தன் வசப்படுத்தி வைத்திருக்கிறது. தம் பிடியில் இருந்து அதிமுக இம்மி பிசகினாலும் திமுக அரியணை ஏறிவிடும் என்பதால் உறங்காத விழிகளுடன் காத்திருக்கிறது டெல்லி. இதற்கு பலம் சேர்க்கவே நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட அஸ்திரங்களையும் துணைக்கு வரவழைத்துக் கொண்டிருக்கிறது டெல்லி. அன்று எம்ஜிஆரைப் போலவே ரஜினிகாந்தை அரசியல் களத்துக்கு தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்க விரும்பியது டெல்லி.
ரஜினி இன்னொரு எம்ஜிஆர்?
ஆனால் பிடியே கொடுக்காத ரஜினிகாந்தை, நீங்கள் கட்சி ஆரம்பிக்காவிட்டால் ரசிகர்கள் தற்கொலை செய்வார்கள் என்கிற ரேஞ்சில் மிரட்டி இப்போது ஆடுகளத்தில் உருட்டிவிட்டிருக்கிறது. டெல்லியின் ஆடுபுலி ஆட்டத்தில் ரஜினிகாந்த் என்ன சாதிப்பார்? திமுகவை ஆட்டம் காண வைத்த அன்றைய எம்ஜிஆர் போல விஸ்வரூபம் காட்டுவாரா இன்றைய ரஜினிகாந்த்? என்பதற்கான விடை வரும் மாதங்களில் தெளிவாகவே தெரிந்துவிடும்!