ஒருத்தருக்கும் பதவி இல்லை- ஒட்டுமொத்த தமிழக பாஜக மீது டெல்லி மேலிடம் செம 'காண்டு'
சென்னை: அகில இந்திய அளவிலான நியமனங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கூட ஒரு பதவியையும் பாஜக மேலிடம் வழங்கவில்லை. தமிழக பாரதிய ஜனதா கட்சியினரின் கோஷ்டி பூசல்கள் உள்ளிட்ட அர்த்தமற்ற அக்கப்போர்களால்தான் இத்தகைய கடுமையான புறக்கனிப்பை டெல்லி மேலிடம் காட்டியிருக்கிறது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பாஜகவால் காலூன்றவே முடியாத ஒரு மாநிலம் என்கிற நிலை வலிமையாகிக் கொண்டே இருக்கிறது. தமிழக மக்களின் அத்தனை இயல்பான மனநிலைக்கும் எதிரான போக்கை பாஜக கடைபிடிப்பதுதான் இந்த அனர்த்தங்களுக்கு காரணம்.
இப்படியான ஒரு போக்கு இருக்கிறது.. அதற்கேற்ப டெல்லி மேலிடமாவது சில விட்டுக்கொடுப்புகளை தமிழக விஷயத்தில் செய்ய வேண்டும் என்கிற வலியுறுத்தலும் தமிழக பாஜக தரப்பிலும் இல்லை. டெல்லியும் கூட என்னதான் நடக்கும் பார்ப்போம் என்கிற ரேஞ்சில் அதகளமாடி வருகிறது.
"பாஜக"வுக்கு எதிராக பேசினால்.. குறி வைக்கப்படுகிறார்களா.. பதட்டத்தில் பாலிவுட்.. டென்ஷனில் கலைஞர்கள்
தமிழக பாஜகவில் எல்லோரும் தலைவர்கள்
இதனால்தான் தமிழகத்தில், பாஜக என்றாலே எட்டிக்காயைவிட படுமோசமாக பார்க்கிறது களநிலவரம். தமிழக பாஜக தலைவர்களிடையேயான ஓராயிரம் கோஷ்டி பூசல்கள், ஜாதிய பாகுபாடு உள்ளிட்டவை இன்னொருபுறம். இன்னும் சுருக்கமாக சொன்னால் தமிழக பாஜகவுக்கு தலைவராக ஒருவர் இருந்தாலும் கூட தடி எடுத்தவர்கள் இங்கே தண்டல்காரர்கள் கதைதான்!
தாமரைக்கான வியூகமே இல்லை
இதேபோக்கு நீடித்தால் என்னதான் பாஜக தலைகீழாக நின்றாலும் தாமரை மலரவே மலராது என்கிற நிலைமைதான். இதனைதிட்டவட்டமாக டெல்லி உணர்ந்தே வைத்திருக்கிறது. தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக இருப்பது தத்துவார்த்த சிந்தனை. இதனை பாஜகவால் ஊடறுத்து முன்னேற முடியாமல் போராடுகிறது. இதனை வீழ்த்த எந்த யுக்தியும் பயனும் தரவில்லை.
கோபத்தை கொட்டிய டெல்லி
தமிழக பாஜக தலைவர்களும் தாமரையை மலர வைக்க எந்த ஒரு ஆக்கப்பூர்வமான பணிகளையும் செய்யவே இல்லை என்பதும் டெல்லி பாஜக மேலிடத்தின் கோபம். இதனைத்தான் புதிய நிர்வாகிகள் நியமனத்தில் மொத்தமாக காட்டிவிட்டது டெல்லி மேலிடம். அகில இந்திய அளவில் அத்தனை மாநிலங்களுக்கும் ஏதேனும் ஒரு பதவி கொடுத்த பாஜக மேலிடம் தமிழக தலைவர்கள் யாருக்கும் தேசிய பதவியையே தரவில்லை.
கூண்டோடு அவமானம்
தேசிய செயலாளராக இருந்த ஹெச். ராஜாவின் பதவியையும் கூட பறித்துவிட்டது. ஆனால் எங்க ஜி ஆளுநராகப் போகிறார் என சூடுபோட்டுக் கொண்ட கதையாக ஹெச். ராஜா ஆதரவாளர்கள் காலரை தூக்கிவிடுகின்றனர். தேசிய அளவில் ஒரு கட்சியின் மேலிடமே ஒரு மாநில நிர்வாகிகளை கூண்டோடு புறக்கணிப்பது என்பது மிகப் பெரிய அவமானம். எவ்வளவு கோபம் இருந்தால் இப்படி ஒரு கூண்டோடு ஒதுக்கி வைக்கும் போக்கை டெல்லி வெளிப்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.