தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலைக்கு.. டெல்டா வைரஸ்தான் காரணமாம்.. குண்டை தூக்கிபோட்ட ஆய்வு முடிவு!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்குவதற்கு டெல்டா வைரஸ்தான் மிக முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக கடுமையாக வாட்டி எடுத்தது. தற்போது கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்து விட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலைக்கு டெல்டா வைரசே காரணம் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்டா வைரஸ்
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை கூறியுள்ளதாவது:- தமிழ்நாட்டில் டிசம்பர் 2020 முதல் 2021 மே வரை 1159 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 554 பேரின் முடிவுகள் வந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேரை டெல்டா(B.1.617.2) வகை வைரஸ் தாக்கி இருப்பது தெரியவந்தது.
டெல்டா வைரஸ்தான் காரணம்
இதன் மூலம் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்குவதற்கு மிக முக்கிய காரணம் டெல்டா வைரஸ் என்பது தெரளிவாகிறது. இந்த வைரஸ் அதிக வீரியத்துடன் இருப்பதால் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பலரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்ட்டுள்ளது தெரியவந்துள்ளது.
குழந்தைகளுக்கு பாதிப்பு
அதாவது 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 18.9% பேர் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டனர். 13 வயது முதல் 17 வயது வரை உள்ள இளம்பருவத்தினரில் 3.4% பேரும், 18 முதல் 44 வயது வரை உள்ள இளைஞர்களில் 46.1% பேரும், 45 வயதுக்கு மேற்பட்டோர் 31.6% பேரும் டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
605 மாதிரிகள் வெயிட்டிங்
554 மாதிரிகளில் 386 (70%) இல் டெல்டா வைரஸ் மாறுபாடு காணப்பட்டது. 47 மாதிரிகள் (8.5%) ஆல்பா மாறுபாட்டை (பி .1.1.7) கொண்டிருந்தன. இன்னும் 605 மாதிரிகள் வர இருக்கின்றன என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்தார்.