மேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்.. கவுன்சிலர் சீட்டுக்கு செம கிராக்கி!
சென்னை: வாழ்வது வரம் எனில் அதனினும் சூப்பர் வரம் கவுன்சிலராக வாழ்வது... ஆம் இப்போது நடைபெற போகும் உள்ளாட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர்களுக்கு தான் மவுசு. கிராக்கி. ஏனெனில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்கப்போவது இவர்கள் தான்.
உள்ளாட்சி தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நேரடி தலைவன் என்றால் அது கவுன்சிலர் தான்.சுயேட்சையாகவோ, கட்சிகள் சார்பாகவோ யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
மாநகராட்சிகளில் கவுன்சிலராக வெற்றி பெற்றால், உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மேயராக கூட வாய்ப்பு இருக்கிறது. மற்ற பகுதிகளில் என்றால் நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவராகவும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்தமுறை ஆளும் எதிர் தரப்பு இடையே கடும் போட்டி இருக்கும்.
திறமைசாலிகள்
இதனால் கவுன்சிலர் பதவிக்கு சீட் பெற ஆளும் மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக திமுகவில் கடும் போட்டி இருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது போல் காத்துக்கிடக்கிறார்கள். இந்த முறை சீட்டு கிடைப்பவர்களை திறமைசாலிகள் என்று அழைத்தால், வெற்றி பெறுபவர்களை அதிர்ஷ்ட சாலிகள் என்று அழைக்க வேண்டும்.
மக்கள் பிரச்சனைகள்
கவுன்சிலர்களே இந்த முறை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்யப்போகிறார்கள். தங்கள் வார்டு எந்த பிரச்சனை இருந்தாலும் எளிதாக குறைகளை நிவர்த்தி செய்ய முடியும். அதிகாரிகள் நிச்சயம் கவுன்சிலர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தே ஆக வேண்டும்.
செய்ய வேண்டும்
இல்லாவிட்டால் நகராட்சி தலைவருக்கு அவர்கள் இந்தமுறை ஆட்டம் காட்ட முடியும். பதவியை தக்க வைக்க வேண்டும் எனில் ஒவ்வொரு வார்டு வாரியாக மக்களின் குறைகளை அதிகாரிளும் சரி, நகராட்சி தலைவரும் நிவர்த்தி செய்தே ஆக வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
கெத்து காட்டலாம்
கவுன்சிலராக நீங்கள் வென்று உங்கள் ஏரியா மக்களின் குறைகளை உடனே நிவர்த்தி செய்வதன் மூலம் அங்கு நீங்கள் ராஜாவாக கெத்தாக இருக்க முடியும். இவரை போல் இருக்க வேண்டும் என்று பெயர் வாங்கவும் முடியும். கவுன்சிலராக வென்றால் பேட்ட படத்தில் வரும் ரஜினியை போல் மரண மாஸாக உலா வரலாம்.
மக்கள் எஜமான்கள்
தமிழகத்தில் வார்டு கவுன்சிலர்களே உள்ளாட்சியை நிர்வாகம் செய்யபோகும் தலைவர்களாக உருவெடுக்க உள்ளார்கள். அதை தீர்மானிக்க போகும் எஜமான்களாக மக்கள் உள்ளார்கள். எனவே தங்கள் பகுதிக்கு யார் வந்தால் சிறப்பாக இருக்கும். எவரை தேர்ந்தெடுத்தால் நன்றாக செயல்படுவார் என்பதை பார்த்து தீர்மானித்தால நல்லது. மாறாக காசு வாங்கி தீர்மானித்தால் அதன் விளைவுகளுக்கும் மக்களே பொறுப்பாளி.