காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடங்கி சூப்பர் புயல் வரை... எத்தனை கிமீ வேகத்தில் காற்று வீசும் தெரியுமா
புயல் என்றால் என்ன என்றும், அது எவ்வாறு உருவாகிறது என்றும் புயல் கரையை கடக்கும் போதும் வீசும் காற்றின் வேகத்தை பொறுத்து அதற்கு தீவிர புயல் என்றும், அதி தீவிர புயல் என்றும் சூப்பர் புயல் என்றும் பெயர்
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதி தீவிர புயலாக உருவாகி கரையை கடக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடங்கி சூப்பர் புயலாக உருமாறி கரையை கடப்பது வரைக்கும் எந்த நிலையில் எத்தனை கிமீ வேகத்திற்கு காற்று வீடும் என்று சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.
சைக்ளோன் என்றால் கிரேக்க சொல்லில் சுருண்டு கிடக்கும் பாம்பு என்று அர்த்தம் உள்ளது. பாம்பை போலத்தால் புயலானது சீறி பலரையும் அச்சுறுத்துகிறது. கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி மாறி புயலாக உருமாறி, தீவிரமடைந்து அதி தீவிர புயலாக மாறி சூப்பர் புயலாக உருவெடுக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடங்கி சூப்பர் புயல் வரை ஒவ்வொரு படி நிலைக்கு ஏற்ப காற்றின் வேகம் அதிகரிக்கும். காற்றழுத்தம் உருவாவது தொடங்கி சூப்பர் புயலாக மாறுவது வரைக்கும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் வெப்பத்தால் கடல் நீர் சூடாகிறது. இதனால் ஆவியாகும் நீர், கடலின் மேற்பரப்பில் சூழ்ந்துள்ள காற்றுடன் கலக்கிறது. இந்த சூடான ஈரக்காற்று, செங்குத்தாக நேர் மேலே செல்கிறது. கடலின் மேற்பரப்பில் இருந்த பெரும்பாலான காற்று மேலே சென்று விடுவதால், அந்த இடத்தில் குறைவான காற்றே மீதம் உள்ளது. இதனால், அந்த வளிமண்டலப் பகுதியில் காற்றழுத்தம் குறைகிறது.
இந்தக் குறை அழுத்தத்தை நிரப்ப, அதன் சுற்றுப் பகுதியில் உள்ள வளி மண்டலக் காற்று சுழன்று விரைகிறது. இவ்வாறு, மேலே சென்று தங்கும் சூடான ஈரக் காற்று, குளிர்ந்து, நீர்த்திவலைகள் உறைந்த மேகமாகிறது . இந்த மேகமானது, காற்றுடன் சேர்ந்து சுழல்கிறது.
இப்படித் தொடர்ந்து, ஏற்படும் நீராவிப்போக்கால் அந்தப் பகுதியை மையமாகக் கொண்டு பெரிய அளவில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறது. அதற்கேற்றபடி, இந்தக் குறை அழுத்தப் பகுதியை நிரப்ப, வலிமையான காற்று தேவைப்படுகிறது. இந்தக் காற்று, குறை அழுத்த மையப் பகுதியைச் சுற்றிச் சுழன்று அதி வேகத்துடன் சென்று, அந்தப் பகுதியை நிரப்ப முயலுகிறது.
காற்றின் வலிமை அதிகரித்துக் கொண்டே செல்வதால், அது புயலாக மாறுகிறது. இதனால் தான் இந்த சுழலும் மேகக்கூட்டங்கள், செயற்கைக் கோள் படத்தில் வட்டமான துளை கொண்ட மையப் பகுதியை உடைய மேகச் சுருள் போல் காட்சி அளிக்கிறது. இந்த வட்டமான மையப் பகுதிக்கு கண் என்று பெயர்.
புயலின் கண் பகுதியென்பது அதன் மையத்திலிருக்கும் மிதமான காற்றழுத்தப் பகுதி. இது, சுமார் 30 - 65 கி.மீ விட்டம் கொண்டிருக்கக் கூடும். அங்கு நிலவும் காற்றழுத்தம் வெளிப்புறத்தில் இருப்பதைவிடக் குறைத்தே காணப்படும். காற்று மேலெழுந்து, பின் குளிரும் நிலையினில் சில அடர்த்தியான காற்று கீழ் நோக்கி நகர்ந்து தெளிவான புயலின் கண் பகுதி உருவாகும். அதிக வலுக்கொண்ட புயலின் மையப்பகுதி அடர்ந்த உருளை வடிவில் தோற்றமளிப்பதால் அது புயலின் கண் எனப்படுகிறது.
இந்தச் சுழலும் மேகக் கூட்டத்தை உள்ளடக்கிய காற்று, நகர்ந்து கரையை அடையும் போது, நிலப் பகுதியை சூறாவளிப் புயலுடன் கூடிய மழையாகத் தாக்குகிறது. நிலத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் போது இந்தப் புயல் காற்று வலுவிழக்கிறது
.
தண்ணீரின் இயல்பு பள்ளத்தை நோக்கிப் பாய்வது. காற்றின் இயல்பு மேல்நோக்கி எழுவது. வெப்பக் காற்று விரைவாக மேலெழும். ஈரக்காற்று மெல்ல மெல்ல மேல் நோக்கிச் செல்லும். காற்றின் நகர்விற்கு வானிலை ஆய்வாளர்கள் வைத்துள்ள பெயர் சலனம்.
ஈரக்காற்று வெகு உயரம் செல்லாமல் வானில் தங்கிவிடுவதால் அது தாழ்வுநிலை. அந்தத் தாழ்வுநிலை காரணமாக காற்றின் அழுத்தம் அதிகரித்தால் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகிறது.
கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் போது காற்று சாதாரணமாக மணிக்கு 31 கி.மீ. வேகத்தில் வீசும். மணிக்கு 32 கி.மீட்டரிலிருந்து 51 கி.மீ. வரை காற்று வீசினால் அதற்கு அழுத்தம் என்று பெயர். அதுவே வேகம் அதிகரித்து 52 கிமீட்டரில் இருந்து 61 கி.மீ. வேகத்தில் வீசினால் அது தீவிர அழுத்தம் .
காற்றானாது 62.கி.மீட்டரிலிருந்து 88 கி.மீ.வரை வீசினால் அதற்கு புயல் என்று பெயர். அதற்கு மேல் தீவிர புயலாக மாறி மணிக்கு 89 முதல் 118 கி.மீ வேகத்தில் காற்று வீசும். அதே நேரத்தில் அதிதீவிர புயலாக மாறினால் மணிக்கு 119 கிமீ முதல் 221 கிமீ வரை காற்று வீசக்கூடும். சூப்பர் புயல் என்றால் மணிக்கு 222 கி.மீ மேல் காற்று வீசக்கூடும்.
நிவர் புயலானது தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்தாலும் ஆறு மணி நேரம் கரையில் நின்று விளையாடும். இந்த புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.