காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் - 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும், தமிழகத்தில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடாவிலேயே நீடித்து வருகிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மன்னார் வளைகுடா பகுதியில் 30 மணி நேரத்திற்கும் மேலாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. மேலும், சில மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் அங்கே நிலை கொண்டு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் பயிரடப்பட்ட நெற்பயிர்கள் முற்றிலும் மூழ்கியுள்ளளன.
கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குள்ளஞ்சாவடி அருகேயுள்ள பெருமாள் ஏரியில் இருந்து நேற்று 12,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 19,000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கொளக்குடி, ஓணான்குப்பம், சிறுபாலையூர், அகரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளநீர் சூழ்ந்து தத்தளிக்கின்றன.
கொட்டித்தீர்த்த கனமழை... கடலாக மாறிய கடலூர்... விளைநிலங்களில் வெள்ளம் - கண்ணீரில் விவசாயிகள்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இரண்டு நாட்களாக மன்னார் வளைகுடாவிலேயே நீடித்து வருகிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் கனமழை தொடரும். இதனையடுத்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.