பாரதிய ஜனதா கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்... துணை முதல்வர் ஓபிஎஸ் ட்வீட்
சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்யும் நடவடிக்கைகளில் முக்கிய அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர பெரும்பாலான முக்கிய கட்சிகளுடன் திமுக தனது தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிட்டது.
அதேநேரம் அதிமுக 23 தொகுதிகளை அளித்த பாமகவுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்திருந்தது. இந்தச் சூழ்நிலையில், அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு நேற்று இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்து துணை முதல்வர் ஓபிஎஸ் ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "நடைபெறவுள்ள 2021 - சட்டமன்ற பொதுத் தேர்தலில், அஇஅதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் 20 தொகுதிகள் ஒதுக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!" எனப் பதிவிட்டுள்ளார்.
அதிமுக- பாஜக தொகு பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக நள்ளிரவு அறிவிக்கப்பட்டது. 20 சட்டசபை தொகுதிகளும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் பாஜக போட்டியிடவுள்ளது.