வேட்டியை மடித்துக்கொண்டு களம் இறங்கிய ஓபிஎஸ்.. வெள்ளம் பாதித்த பகுதிகளில் அதிரடி விசிட்!
சென்னை: சென்னையில் நிவர் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியும் வழங்கினார்.
நிவர் புயலால் சென்னையில் பெரிய தாக்கம் ஏற்படவில்லை- அதேநேரம் நிவர் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்கள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
சென்னையில் மழை நீர் வடிவதற்கு போதிய இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து மூன்று நாட்களாக மழை பெய்து வந்ததால் பல இடங்களில் வெள்ளம் வடியாமல் உள்ளது.
நகர மறுக்கிறது.. எங்க போய் நிக்குது பாருங்க நிவர்.. திருவண்ணாமலையில் விடாமல் சுழன்று அடிக்கும் புயல்
எங்கு பாதிப்பு அதிகம்
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாம்பரம் பகுதியில் தான் கனமழை பெய்தது. சென்னையில் சுமார் 20 செமீ அளவிற்கு பல இடங்களில் மழை பெய்தது. தரமணி, பெரியார் நகர், வேளச்சேரி, தண்டையார்பேட்டை, திருவிநகர், தாம்பரம், முடிச்சூர் உள்பட பல பகுதிகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ளது. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் துணை முதல்வர்
இந்நிலையல் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரிதகதியில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் மீட்புபணிகளை பார்வையிட சென்றுள்ள நிலையில், சென்னையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
இன்று காலை நிவர் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட தரமணி - பெரியார் நகர் பகுதியில் ஓபிஎஸ் ஆய்வு மேற்கொண்டார். வெள்ள நீரில் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு களம் இறங்கிய ஓபிஎஸ், மக்களிடம் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். உரிய வசதிகளை ஏற்படுத்துமாறும், வெள்ள நீரை வடியவைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டார். அத்துடன் மழையால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
உதவிகளை வழங்கினார்
அதனைத்தொடர்ந்து வேளச்சேரி ரயில் நிலையத்தை பார்வையிட்டார். பின்னர் வேளச்சேரியில் நிவர் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். வேளச்சேரி அம்பேத்கர் நகரில் அமைக்கப்பட்டுளள முகாம்களில் நிவாரண முகாம்களுக்கு சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.