ரஜினி பேச்சை கண்டிக்கிறேன்... அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய ஓ.பி.எஸ்.பேட்டி
Recommended Video
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தை, தாம் வன்மையாக கண்டிப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
10 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த அவர் திங்கள்கிழமை இரவு 8.30 மணிக்கு சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.சை வரவேற்பதற்காக அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் இருந்து விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
ரஜினிக்கு கண்டனம்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது 10 நாள் அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கையோடு, ரஜினி பேச்சை கண்டிப்பதாக கூறியிருப்பது அரசியல் களத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு பல தருணங்களில் ரஜினி தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவர் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தடபுடல் வரவேற்பு
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை விமான நிலையத்திற்கு சென்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, அதிமுக அவைத்தலைவர் மதுசூதணன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜேஷ் ஏற்பாட்டில் தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொழிலதிபர்கள் உறுதி
தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அமெரிக்காவில் தொழிலதிபர்களுக்கு தாம் அழைப்பு விடுத்துள்ளதாகவும், தமது அழைப்பை ஏற்று பலர் தொழில் தொடங்க வருகை தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும், குறைந்த விலையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்ட வீடுகளை பார்வையிட்டதாகவும் கூறினார்.
வெற்றிப்பயணம்
அமெரிக்க பயணம் வெற்றி பயணம் என்றும், தமிழக வீட்டு வசதி திட்டங்களுக்காக உலக வங்கி ரூ.5,000 கோடி நிதி தருவதாக ஒப்புதல் அளித்துள்ளதாகவும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். கூறினார்.