ஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்?தேர்தல் அறிவிப்பு எதிரொலி
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல இருந்த நிலையில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது பயணத்திட்டம் மாற்றப்படுவதாக கூறப்படுகிறது.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாட்கள் அரசு முறை பயணமாக சென்று வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதேபோல் அமைச்சர்களும் துறைசார்ந்த விவகாரம் தொடர்பாக வெளிநாடுகளுக்கு சென்று திரும்பினர்.
வெளிநாட்டிற்கு செல்லாத அமைச்சர்கள் என லிஸ்ட் எடுத்தால், அதில் ராஜலட்சுமி, பெஞ்சமின், வளர்மதி, என சொற்ப எண்ணிக்கை தான் வரும். அந்தளவுக்கு திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி நிலோபர் கபில் வரை வெளிநாடுகளுக்கு சென்று வந்துவிட்டனர்.
ஓ.பி.எஸ்.பயணம்
துணை முதலமைச்சராக உள்ள ஓ.பி.எஸ்.வசம் வீட்டு வசதி வாரியத்துறை உள்ளதால் அதன் கீழ் சி.எம்.டி.ஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வருகிறது. அதனடிப்படையில் நகரின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக சீனா, சிங்கப்பூர் செல்ல ஓ.பி.எஸ். தயாராகி கொண்டிருக்கும் நிலையில் விக்கிரவாண்டி, நாங்குனேரி ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்தல் பணி
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது திமுக. ஏனென்றால் இரண்டு தொகுதிகளும் திமுக, காங்கிரஸ் வசம் இருந்தவை. இதனால் தேர்தல் பணிகளில் திமுக தீவிரம் காட்டும் என்பதால், தாம் இங்கு இருந்தால் தான் அதிமுகவினரை முடுக்கிவிட முடியும் என நினைக்கிறாராம் ஓ.பி.எஸ்.
பயணத்திட்டம் மாற்றம்?
அக்டோபர் இரண்டாவது வாரம் ஓ.பன்னீர்செல்வம் வெளிநாடு செல்ல இருந்ததாக கூறப்பட்ட நிலையில், பயணத்திட்டத்தை மாற்றும் முடிவில் இருக்கிறாராம் அவர். இடைத்தேர்தல் பணியை விட வெளிநாட்டு பயணம் முக்கியமானதா என கட்சியினர் எண்ணிவிடக் கூடாது என்பது ஓ.பி.எஸ்.சின் கருத்தாக உள்ளதாம்.
பிரச்சாரம்
இடைத்தேர்தலில் எப்பாடுபட்டாவது அதிலும் குறிப்பாக நாங்குனேரியில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி டெல்லியிடம் தங்கள் பலத்தை காட்ட நினைக்கிறதாம் அதிமுக தலைமை. நாளை மறுதினம் வேட்பாளரை அறிவித்து முதல்வரும், துணைமுதல்வரும் தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளார்களாம்