முதல்வரை முந்திய துணை முதல்வர்... கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஓபிஎஸ்
சென்னை: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார்.
இந்தியாவில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளின் கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்கள் 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் அவர்களும் விரைவில் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார். அவர் சென்னையில் உள்ள MGM மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
தமிழ்நாட்டில் தற்போதுவரை சுகாதார துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மட்டுமே கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளார். மருத்துவர் என்ற அடிப்படையில் அவர், முதல்கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகளின் போதே கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். அவருக்குப் பின், தற்போது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார்.
முன்னதாக, கடந்த மார்ச் 1ஆம் தேதி காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி எய்ம்ஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். அதேபோல உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் முதல் நாள் இரவு டெல்லியுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் பல்வேறு அமைச்சர்களும் தொடர்ந்து தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டு வருகின்றனர்.