திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் - நிர்வாகம் வேண்டுகோள்
தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை: திருவண்ணாமலையில் வரும் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் மற்றும் வெளியூர் வாகனங்கள் வரத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரக்கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்தாண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலையும், மாலையும் கோவிலில் உள்ள ஐந்தாம் பிரகாரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நவம்பர் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு நான்கு மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
தமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்
இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக, வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது நிவர் புயல் மழை வெள்ளம் காரணமாக திருவண்ணாமலை தீப விழாவுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் மற்றும் வெளியூர் வாகனங்கள் வரத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.