இன்னொரு மீசைக்கார நண்பா.. இன்றோடு விடை பெறுகிறார்.. "குட் ஆபீசர்" ஜாங்கிட்!
ஐபிஎஸ் அதிகாரி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் அட்டூழியம் செய்து வந்த, பவாரியா கொள்ளை கும்பலை ஒழித்த, ஐபிஎஸ்., அதிகாரி, ஜாங்கிட், இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
தமிழகத்தைக் கலக்கிய மீசைக்கார போலீஸ் அதிகாரிகளில் ஜாங்கிட்டுக்கும் தனி இடம் உண்டு. அப்படிப்பட்ட தனி முத்திரை பதித்த அதிகாரியான ஜாங்கிட் ஓய்வு பெறுவது நிச்சயம் காவல்துறைக்குமே கூட பெரிய இழப்புதான்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜாங்கிட்டை தமிழக மக்கள் வித்தியாசமாக பார்க்கவில்லை. தங்களில் ஒருவராக சீக்கிரமே வாரி எடுத்துக் கொண்டனர். காரணம், ஜாங்கிட்டின் செயல்பாடுகள் அப்படி.
மறக்க முடியாது
1985ல் தேர்வு பெற்று, அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பி.யாக பணி அமர்த்தப்பட்டார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து உயர்வுதான். அப்படிப்பட்ட ஜாங்கிட் கடந்த 30 ஆண்டுகளில் தமிழகம் மறக்க முடியாத வெகு சில அதிகாரிகளில் ஒருவராக திகழ்கிறார். இவருடைய கண்டிப்பும், கடமையும் மட்டுமல்ல மீசையும் கூட வரலாற்றில் இடம் பிடித்ததுதான்.
வீரப்பன் வேட்டை
தமிழகத்தைக் கலக்கிய மீசைக்கார போலீஸ் அதிகாரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். வால்டர் தேவாரம் அதில் ஒருவர். அவருடைய மீசைதான் முதலில் நினைவுக்கு வரும். கண்டிப்பான அதிகாரி. பாரபட்சம் பார்க்காதவர். வீரப்பன் வேட்டையின் ஆரம்ப கட்டத்தில் படு தீவிரம் காட்டியவர். பின்னர் இவரது சிஷ்யர் விஜயக்குமார் வந்து வீரப்பன் கதையை முடித்தது வேறு கதை.
மீசைக்கார அதிகாரி
அதேபோல பொன் மாணிக்கவேல். இந்த மீசைக்கார அதிகாரியும் தனது பாணியில் தமிழகத்தைக் கலக்கியவர். எடுத்த பணி எல்லாவற்றிலும் அதகளம்தான். கடைசியாக சிலை திருட்டுக் கடத்தல் வழக்குகளில் சிலம்பாட்டம் ஆடி தமிழகத்தை அதிர வைத்தவர். அவரும் சமீபத்தில்தான் ஓய்வு பெற்றார்.
எழுத்தாளர்
இந்த நிலையில் தற்போது ஜாங்கிட் விடை பெறுகிறார். தமிழகத்தில் அட்டூழியம் செய்து வந்த, பவாரியா கொள்ளை கும்பலை ஒழித்த பெருமைக்குரியவர் இவர். அதேபோல ரவுடிகள் அட்டகாசத்தை ஒழிக்க தீவிரமாக செயல்பட்டவர். கள்ளச்சாராயக் கும்பல்களை வேட்டையாடிவரும் கூட. இப்படி பல பெருமைகள் இவருக்குள் உள்ளன. நல்ல எழுத்தாளரும் கூட.. ஈரமான இதயம் கொண்ட கடமை தவறாத காவல் அதிகாரியும் கூட.