ஆர்டர்லிகளை திரும்ப அனுப்புங்கள்.. நீதிமன்ற உத்தரவை அடுத்து டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு
சென்னை; கடந்த 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்டர்லி முறையானது இன்றும் தமிழ்நாடு காவல்துறைகளில் தொடர்ந்து வந்துகொண்டிருப்பது குறித்து உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது.
இந்நிலையில் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் அளவுக்கு அதிகமாக ஆர்டர்லிகளாக பணியாற்றுபவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆர்டர்லி முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறி வரும் நிலையில் டிஜிபி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆர்டர்லியாக பணியாற்றி வருகின்றனர்.
ஆர்டர்லி எனும் முறையானது மேற்குறிப்பிட்டதைப்போல 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. 24*7 மணிநேரமும் பணியிலிருக்கும் காவல்துறை உயர் அதிகாரி எந்நேரமும் விழிப்புடன் செயல்பட வேண்டி இருக்கும். இவர்களுக்கு உதவிக்காக ஆர்டர்லி பயிற்சி பெற்ற சீருடை பணியாளர்கள் எப்போதும் உடன் இருப்பார்கள். அதிகாரிகளுக்கு அதிகாரிகளின் தொலைபேசி அலைப்புகளுக்கு பதிலளிப்பது, சீருடைகளை பராமரிப்பது, அதிகாரிகளின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவது உள்ளிட்டவைதான் ஆர்டர்லிகளின் பணியாகும்.
ஆனால் காலப்போக்கில் இந்த நடைமுறையானது தொடர்ந்து, தங்களுக்கு வேண்டிய எடுபிடி வேலைகளை செய்ய இவர்களை அதிகாரிகள் பயன்படுத்திக்கொண்டாக குற்றச்சாட்டு மேலெழுந்தது. இந்நிலையில் காவல் துறையில் தற்போது பணியாற்றும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் ஆர்டர்லிகளை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, தனிப்பட்ட வாகனங்களில் காவல் துறை ஸ்டிக்கர்கள், கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உத்தரவிடப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் குமரேசன், "தமிழகத்தில் காவல் துறையில் ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். இதற்கு குறுக்கிட்ட நீதிபதி, "பணியை தொடங்கினால் மட்டும் போதாது. அனைத்து ஆர்டர்லிகளையும் ஒரே உத்தரவில் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அகில இந்திய பணி விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 1979-ம் ஆண்டே ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டும், அது இன்னும் தொடர்கிறது. அதை உடனடியாக ஒழிக்க வேண்டுமென நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், "உங்கள் வீட்டில் வளர்க்கும் நாயை பராமரிக்க பயிற்சி பெற்ற காவலர் வேண்டுமா? உங்கள் நாயை நீங்கள் பராமரிக்க வேண்டியது தானே?" என கடும் கேள்வி கணைகளை தொடுத்தார். இதனையடுத்து இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது "ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும். ஆனால் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடமிருந்தோ வருவதில்லை" நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வருத்தம் தெரிவித்தார்.
மேலும், "நாடு சுதந்திரம் அடைந்து 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் ஆங்கிலேயர்களின் ஆர்டர்லி முறையை இன்னமும் நாம் பின்பற்றிக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது" என கூறியிருந்தார். அதேபோல, "ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழக உள்துறை முதன்மை செயலாளாரின் உத்தரவை பின்பற்றவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறைக்கு உத்தரவிட நேரிடும்" எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கில் காவல்துறை டிஜிபியை எதிர் மனுதாரராக சேர்த்த நீதிபதி, ஆர்டர்லி முறை ஒழிப்பு தொடர்பாக தமிழக உள்துறை முதன்மை செயலாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். இந்நிலையில், அளவுக்கு அதிகமாக உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.