ஒரேயடியாக 76 டி.எஸ்.பிக்கள் டிரான்ஸ்பர்.. ஆருத்ரா வழக்கில் விடுவிக்கப்பட்ட 3 பேருக்கும் போஸ்டிங்!
சென்னை : தமிழகத்தில் மொத்தமாக 76 காவல்துறை டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆருத்ரா கோல்டு வழக்கு தொடர்பான பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட மூன்று டிஎஸ்பிக்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று பணியிடமாற்றம் செய்யப்பட்ட காவல்துறை டிஎஸ்பிக்களில் பெரும்பாலானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரத்திற்கும் பாஜகவுக்கும் என்ன சம்பந்தம்..? எதுக்கு இந்த வேலை? - போட்டுத் தாக்கிய ராஜா!
அதிகாரிகள் மாற்றம்
தமிழகத்தில் கடந்த ஆண்டு திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பலமுறை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் கூட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டனர். இந்நிலையில் தற்போது காவல்துறையில் 76 டிஎஸ்பிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஆருத்ரா வழக்கு தொடர்பான விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்ட மூன்று டிஎஸ்பிக்களும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆருத்ரா கோல்டு வழக்கு
ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் 36 ஆயிரம் ரூபாய் வட்டி வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், முதலீடு செய்ய வாடிக்கையாளர்கள் குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த நிறுவனம் மீது சந்தேகமடைந்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த வழக்கை வழக்கை விசாரித்து வந்த 3 டி.எஸ்.பி.க்கள் திடீரென விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
3 டி.எஸ்.பிக்கள்
ஆருத்ரா கோல்டு டிரேடிங் வழக்கு தொடர்பான பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டு, பின்னர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மூன்று டி.எஸ்.பிக்களான கண்ணன் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை உதவி கமாண்டண்ட் ஆகவும், சம்பத் ராமநாதபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவிற்கும், சுரேஷ் ராமநாதபுரம் சரகர் போலீஸ் பயிற்சி மையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர்
மேலும், தாம்பரம் காவல் ஆணையராக பணியாற்றிய ரவி ஓய்வு பெற்றதை அடுத்து, ஆவடி காவல் ஆணையரே கூடுதல் பொறுப்பாக தாம்பரம் சரகத்தையும் கண்காணித்து வந்தார். இந்நிலையில் தற்போது மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக ரித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.