மகள் நிச்சயதார்த்தம் நின்றுபோனதால் எஸ்.எஸ்.ஐ விரக்தி.. உடனே பறந்த கடிதம்.. டிஜிபி போட்ட ஆர்டர்!
சென்னை : விடுமுறை நாளிலும், ட்யூட்டிக்கு அனுப்பியதால் மகளின் நிச்சயதார்த்தம் தடைபட்டுப் போனதாக வேதனையுடன் பேசிய சிறப்பு உதவி ஆய்வாளருக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால், போலீசாரின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் எஸ்.எஸ்.ஐ சந்தானராஜுக்கு கோவையில் ட்யூட்டி போடப்பட்டதால், அவரது மகள் நிச்சயதார்த்தம் தடைபட்டது. இதுபற்றி, "போலீஸ் டிபார்ட்மென்டில் வேலை பார்த்து எந்த புண்ணியமும் இல்லை" என வேதனையுடன் பேசியிருந்தார் சந்தானராஜ்.
இந்நிலையில், அவருக்கு கடிதம் எழுதியுள்ள டிஜிபி சைலேந்திரபாபு, வரும் நாள்களில் தங்களது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்த ஏதுவாக போதுமான நாட்கள் விடுப்பு வழங்குமாறு எஸ்.பிக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு - தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்- 250 பேரிடம் விசாரணை: டிஜிபி சைலேந்திரபாபு
தமிழக காவல்துறை
தமிழகம் முழுவதும் காவல்துறையில் வார ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிகழ்ந்து வந்த தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் பாதுகாப்பு பணிக்காக அனைத்து போலீசாரும் விடுமுறையின்றி பணிபுரிய உத்தரவிடப்பட்டது. கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில், வெளி மாவட்ட போலீசார் மாற்றுப்பணியாக அனுப்பப்பட்டு வருகின்றனர்.
திருப்புவனம் எஸ்.எஸ்.ஐ
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.எஸ்.ஐ சந்தானராஜ் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. அந்த ஆடியோவில், "எனது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்துள்ளேன். ஒரு வாரத்திற்கு முன்பு மாப்பிள்ளை வீட்டில் இருந்து எனது மகளை பெண் பார்த்துவிட்டு பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்றார்கள். நாங்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு நாள் குறிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை செல்வதாக முன்கூட்டியே முடிவு செய்து வேன் 'புக்' செய்துவிட்டு சொந்த பந்தங்களுக்கும் சொல்லி அனுப்பிவிட்டேன்.
கடும் மன உளைச்சல்
இந்நிலையில் கோவைக்கு பாதுகாப்பு பணிக்கு செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அன்று என்னுடைய முறையல்ல என்பதால் இன்னொரு எஸ்.எஸ்.ஐ-யை அனுப்புமாறு கேட்டேன். ஆனால் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போஸ் இல்லை நீங்கள்தான் போக வேண்டும் என்று வற்புறுத்தினார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் இதனால் என் வீட்டில் நடக்கவிருந்த சுபகாரியமும் தடைபட்டுவிட்டது. வேறுவழியின்றி நான் பாதுகாப்பு பணிக்காக கோவைக்கு சென்றேன்.
ஒரு புண்ணியமும் இல்லை
இத்தனை வருடங்களாக காவல்துறையில் பணிபுரிந்து எந்த ஒரு பயனும் இல்லை. சொந்த மகள் நிச்சயதார்த்தத்தை கூட முறையாக செய்ய முடியவில்லை. டிபார்ட்மெண்ட்டில் எந்தவொரு அட்ஜெஸ்ட்மெண்ட்டும் இல்லை. நாம் வேலை பார்த்து சர்வீஸ் பண்ணி என்ன புண்ணியம்? அப்புறம் ஏன் காவல்துறையில் பணிபுரியும் போலீசார் தற்கொலை செய்ய மாட்டார்கள்?" என நொந்துபோய் பேசியிருந்தார். இந்த ஆடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
விஷயத்தை கேள்விப்பட்ட டிஜிபி
இந்நிலையில், இச்சம்பவத்துக்கு டிஜிபி சைலேந்திரபாபு வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, டிஜிபி சைலேந்திரபாபு, எஸ்.எஸ்.ஐ சந்தானராஜுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "அன்புள்ள சந்தான ராஜ், தங்களின் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடைபட்டதை அறிந்து நான் மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இதுபோன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகள் விடுப்பு மறுக்கக்கூடாது என மேலதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
லீவ் கொடுக்க உத்தரவு
வரும் நாள்களில் தங்களது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடத்த ஏதுவாக போதுமான நாட்கள் விடுப்பு வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். போலீஸ் அதிகாரியின் வேதனை அறிந்து டிஜிபியே அவருக்கு விடுமுறை அளிக்க அறிவுறுத்தியதோடு, கடிதமும் எழுதியுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.