அருமை.. ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சியிலிருந்து டெல்லிக்கு ஒரு எம்பியாம்.. அதையும் விசாரிக்கணும் ஐயா!
Recommended Video
சென்னை: ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சியிலிருந்து டெல்லிக்கு ஒரு எம்பியாம். அதையும் விசாரிக்கணும் என திமுக எம்பி செந்தில்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. அது போல் அதிமுகவும் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே. ஆனால் திமுக கூட்டணியோ 38 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில் மதிமுகவின் கணேசமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், ஐஜேகே கட்சித் தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த சின்ராஜ் உள்ளிட்டோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள்
இந்திய தேர்தல் கழிஷனின், தேர்தல் நடத்தை விதிகளின்படி, ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது. அவ்வாறு போட்டியிடுவது சட்டவிரோதமானது. ஒரு கட்சியில் பொறுப்பு வகித்துக்கொண்டு மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிடுவதற்கு சட்டத்தில் இடமில்லை.
நீட் தேர்வு
எனவே திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மேற்கண்ட 4 எம்பிகளின் வெற்றியும் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி மருத்துவ கல்லூரியில் படித்து வந்த சென்னை மாணவர் உதித் சூர்யா மீது புகார் எழுந்தது.
கேள்வி
இதையடுத்து மேலும் விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
சிக்க போகும் 4 பேர்
அவர் கூறுகையில் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற 4 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு: செய்தி - இந்த 4 பேர் சிக்கிக் கொண்டனர். மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சியிலிருந்து கொண்டு இன்னொரு கட்சியில் இருப்பதாக ஆள்மாறாட்டம் செய்து வெற்றி பெற்ற அந்த 4 பேர் எப்போது சிக்கப் போகிறார்களோ? என கேள்வி எழுப்பியிருந்தார்.
டெல்லி
இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் திமுக தருமபுரி எம்பி செந்தில்குமார் தனது டுவிட்டரில் பதில் கூறியுள்ளார். அவர் கூறுகையில் ஐயா அருமை ஐயா., ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத ஒரு கட்சி ., இங்கே தமிழ் நாட்டில் இருந்து ஒரு ராஜ்ய சபா MP., டெல்லிக்கு அனுப்பியதாக தகவல்., கொஞ்சம் அதுவும் விசாரித்து மக்களுக்கு சொன்னால் நன்றாக இருக்கும் ஐயா என தெரிவித்துள்ளார்.