தோனி இப்படி பேட்டிங் செய்தால், சிஎஸ்கே 'ஸ்பார்க்கிற்கு' எங்கே போகும்?
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன், மகேந்திர சிங் தோனி மறுபடியும் ஒருமுறை தனது சொதப்பலான பேட்டிங்கை வெளிக்காட்டி விட்டார்.
பழம்பெருமை பேசுவதில் ஒரு பயனும் இல்லை என்பார்கள். இப்போது தோனி நிலைமை அப்படித்தான் இருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் அவரைப் பற்றி புகழ்ந்து பேசுவதற்கு எதுவுமே இல்லை.
பல வருடங்களுக்கு முன்பு அவர் அடித்த ரன்கள் அல்லது வெற்றி பெற்ற கோப்பைகளை மறுபடி மறுபடி பேசி மகிழ வேண்டிய நிலைமை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பல வருட தடுமாற்றம்
இந்த ஐபிஎல் தொடர் முழுக்கவே, தோனி பேட்டிங் பக்கத்து வீட்டு பசங்க தெருமுனையில் விளையாடுவதை விட மோசமாக இருப்பது அனைவரும் அறிந்ததுதான். அப்படியானால் ஐபிஎல் தொடருக்கு முன்பாக தோனி பேட்டிங் சூறாவளி மாதிரி இருந்ததா என்றால், இல்லை இப்போது மாதிரிதான் இருந்தது என்பதுதான் பதில். ஆம்.. கடந்த சில வருடங்களாகவே ஏனோ தெரியவில்லை தோனி மிக மிக மோசமாக ஆடி வருகிறார். இதனால்தான் திடீரென அவரே உணர்ந்துகொண்டு இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஐபிஎல் ரன்கள்
அவர் எடுத்த முடிவு நியாயம்தான் என்பதுபோல ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டம் இருந்துவருகிறது. ஆரம்பத்தில் சற்று கீழ் வரிசையில் இறங்கினார். ஆனால் கடைசி நேரத்தில் வந்து அணி வெற்றிக்கு பங்களிப்பு தரவில்லை என்ற விமர்சனங்கள் வந்ததால் தற்போது நான்காவது பேட்ஸ்மேனாக வந்து கொண்டிருக்கிறார். பேட்டிங் போசிஷன் மாறியுள்ளதே தவிர பேட்டிங் திறமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
கிறிஸ் கெயில் கலக்குறார்
வயது அதிகரித்துவிட்டதால் தோனி இப்படி ஆடுகிறார் என்று பரவலாக விமர்சகர்கள் கூறினாலும், அவரை விட சீனியர் பிளேயர் கிறிஸ் கெயில், இன்றும், "வந்தா ராஜாவாகத்தான் வருவேன்" என்று விளாசி கொண்டு இருக்கிறார். அவர் அணிக்கு வந்தது முதல் பஞ்சாப் அணி தொடர்ந்து வெற்றிகளைத்தான் பதிவு செய்து வருகிறது. ஆட்டத்தின் போக்கை நொடிப்பொழுதில் மாற்றுகிறார். 90ஸ் முதல், இப்போது வரை அவரைக் கண்டால் எதிரணிகள் பயந்து கொண்டிருக்கின்றன. ஆனால், 2K பிளேயரான தோனி அதற்குள் இப்படி ஒரு நிலைமைக்கு போவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
சச்சின், டிவில்லியர்ஸ் அசத்தினர்
சச்சின் டெண்டுல்கர், டிவில்லியர்ஸ் என எத்தனையோ திறமைசாலிகள் தங்கள் ஓய்வு காலம் வரை சிறப்பாக ஆடினர். ஓய்வு காலத்திற்கு பிறகும் அவர்கள் திறமையில் எந்த குறைபாடும் வந்தது கிடையாது. இப்படித்தான் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக 32 பந்துகளில் 52 ரன்கள் தேவை என்ற நிலையில் விக்கெட்டை இழந்தார் தோனி. இத்தனைக்கும் பெரிய ஷார்ட் அடித்து அவர் அவுட் ஆகவில்லை. 4 பந்துகளை சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்து இளம் வீரர் வருண் சக்கரவர்த்தி போட்ட பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.
தோனி மோசமான அவுட்
கொஞ்சம்கூட ஃபுட்வொர்க் இல்லை அந்த ஷாட்டில். பந்துகளை விட அதிக ரன்கள் அடிக்க வேண்டிய அந்த நேரத்தில் இத்தனை பந்துகளை அவர் விழுங்கியதோடு, எளிதாக அவுட்டாகி வெளியேறினார். நல்லவேளையாக ரவீந்திர ஜடேஜா 11 பந்துகளில் 31 ரன்கள் குவித்ததால், கடைசி பந்தில் சிஎஸ்கே வெற்றி பெறுவதற்கு உதவியது. கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த இரு பந்துகளையும் சிக்ஸருக்கு மாற்றினார் ஜடேஜா.
சங்ககாரா அட்வைஸ்
ஒரு அணியின் தலைவர்.., மிகச்சிறந்த வீரர்.. தொடர்ந்து பேட்டிங்கில் இப்படி சொதப்பி கொண்டிருந்தால் அணியில் இருக்கும் மற்றவர்களுக்கு எப்படி "ஸ்பார்க்" வரும்? பிளே ஆப் செல்லமுடியாத இந்த காலகட்டத்தில், இளைஞர்களுக்கு வழிவிட்டு தோனி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்.
இதைத்தான் இலங்கை முன்னாள் வீரர் சங்ககாரா நாகரீகமாக சொல்லியுள்ளார். சில 'போட்டி கிரிக்கெட் தொடரில்' விளையாடி தோனி தனது ஆட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்துள்ளார் சங்ககாரா.
தோனிக்கு ஓய்வு
கடந்த சில வருடங்களாகவே தோனி இப்படித்தான் ஆடுகிறார் என்பது சங்ககாராவுக்கும் தெரியும். இருந்தாலும் இப்போதைக்கு ரெரஸ்ட் எடுங்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்பதைத்தான் சங்ககரா நாசுக்காக சொல்லியுள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் தோனி இதை ஏற்பாரா? அல்லது மைதானத்துக்குள் வருவேன் என்று, குழந்தை மாதிரி உருண்டு அடம் பிடிப்பாரா என்பது அவர் கையில்தான் இருக்கிறது.