குழப்பத்தில் டிடிவி தினகரன்... ரஜினி விவகாரத்தில் பதுங்கிய பின்னணி
சென்னை: பெரியார் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு காங்கிரஸ் உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் எதிர்வினையாற்றிய நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மட்டும் அது தொடர்பாக வாயே திறக்கவில்லை.
சசிகலாவின் கணவர், அதாவது தனது சித்தப்பா நடராஜனிடம் அரசியல் பால பாடம் கற்ற தினகரன், பெரியார் விவகாரத்தில் இவ்வளவு தூரம் அமைதியாக இருப்பதைக் கண்டு அமமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலரே கமெண்ட் அடிக்கின்றனர்.
மேலும், டிடிவி தினகரனின் அண்மைக்கால செயல்பாடுகளை பார்த்தால் அதில் மிகுந்த மாற்றம் தென்படத் தொடங்கியுள்ளதாக கூறுகிறார் திருச்சி மாவட்ட முக்கிய நிர்வாகி ஒருவர்.
இன்னும் 10 நாள்தான்.. 5000 இடங்களில் போராட்டம் வெடிக்கும்.. பாருங்கள்.. பீம் ஆர்மி ஆசாத் மாஸ் சவால்
தலைவர்கள் கருத்து
பொங்கல் அன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்தார். அது பெரும் சர்ச்சையாகி தி.க, தி.வி.க. கட்சிகள் மட்டுமல்லாமல் ஏறத்தாழ அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அந்த விவகாரம் தான் கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் பரபரப்பு செய்தியாகவும் உள்ளது. ஆனால் இது குறித்து டிடிவி தினகரன் கருத்து தெரிவிக்காதது அவரது கட்சியினரையே புருவம் உயர்த்தச் செய்துள்ளது.
அரசியல் பணி
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய புதிதில் தமிழகத்தின் தலைப்புச் செய்திகளாக இடம்பிடிக்கும் விவகாரங்கள் பற்றி முதல் ஆளாக தனது கருத்தை அறிக்கை வாயிலாக வெளியிட்டு வந்தார் தினகரன். கால ஓட்டத்தில் அவரிடம் இருந்த வேகம் அப்படியே குறையத்தொடங்கியது. அறிக்கையாக வெளியிட்டு வந்தவர் ட்விட்டரில் தனது கருத்தை சுருக்கமாக பதிவிட்டு அதோடு நிறுத்திக்கொள்ள தொடங்கினார். இப்போது அந்த நடவடிக்கையிலும் மாற்றம் தென்படத்தொடங்கியுள்ளது.
நடராஜன்
திராவிட சித்தாந்தத்தில் ஆழ்ந்த ஈடுபாடுடைய நடராஜனிடம் இருந்து தான் அரசியலையே கற்றுக்கொண்டார் தினகரன். பெரியார், அண்ணா, கொள்கைகளை நடராஜன் மறையும் வரை பெரியளவில் மதித்து போற்றி வந்தார். தினகரனும் அவ்வாறு தான் இருப்பார் என சொல்லும் அளவுக்கு தொடக்கத்தில் அவரது செயல்பாடுகள் அமைந்திருந்தன. ஆனால் அடுத்தடுத்து அவரை சூழந்த அரசியல் குழப்பங்களால் ஒரு திடமான முடிவெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாரோ என்ற கேள்வியை எழ வைக்கிறது.
பாஜக பாசம்
பாரதிய ஜனதா கட்சியை பயங்கரமாக எதிர்த்த தினகரன் இன்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. பகவத்கீதையை அண்ணா பல்கலை. பாடத்திட்டத்தில் சேர்த்தால் தவறில்லை என கருத்து கூறிய போதே, தினகரனின் பாதை மாறுகிறது என அரசியல் நோக்கர்கள் அப்போது ஊடக விவாதங்களில் பதிவிட்டனர். இதனிடையே ரஜினி கருத்து குறித்து அமமுகவின் பார்வை என்ன என அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஒருவரிடம் கேட்டபோது, இப்போது வேண்டாம் என்பதோடு முடித்துக்கொண்டார்.