துரைமுருகனுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா?... கட்சி தலைமை யார் பக்கம்?
சென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் துரைமுருகனுக்கு மீண்டும் சீட் தருவதற்கு, வேலூர் மாவட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கட்சி தலைமை எடுக்க போகும் முடிவை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி பேச்சுவார்த்தை ஒருபுறம்,பிரசாரம் ஒரு புறம், யாருக்கு சீட் தருவது என்ற ஆலோசனை ஒரு புறம் என தமிழக அரசியல் கட்சிகள் படு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன.
அதிலும், பிரதான கட்சிகளான அதிமுக - திமுக.,வின் செயல்பாடுகள் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. எந்த தொகுதியில் யார் போட்டியிட போகிறார்கள், யாருக்கு வெற்றி வாய்ப்பு என மக்கள் இப்போதே கணிப்பை துவங்கி விட்டனர்.
திமுக தீவிரம்
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, இந்த முறை எப்படியும் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் அவர்களின் கட்சிக்குள் மூத்த தலைவர்கள் சிலருக்கு மீண்டும் சீட் தர கட்சி நிர்வாகிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்களில் முன்னணியில் இருப்பது துரைமுருகன் தானாம்.
துரைமுருகனுக்கு எதிர்ப்பு
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வழக்கமாக காட்பாடி தொகுதியில் தான் போட்டியிடுவார். 82 வயதாகும் துரை முருகன் 8 முறை எம்எல்ஏ.,வாக இருந்துள்ளார். ஆனால் தற்போது அவரது மகன் கதிர்ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இதனால் துரைமுருகனுக்கு அதே தொகுதியில் எம்எல்ஏ., சீட் தர வேண்டும் எனவும், இளைஞர்களுக்கு வழிவிட்டு, வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு துரைமுருகன் ஓய்வு எடுக்கலாம் என்றும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
தலைமைக்கு கடிதம்
இது தொடர்பாக திமுக தலைமைக்கும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.அதில் துரைமுருகனின் உடல்நிலையை அவர்கள் முக்கிய காரணமாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் துரைமுருகன், பிரசாரத்திற்கு செல்வது கடினம் என்பதால் அவர் இனி கட்சிக்கு ஆலோசனை மட்டும் வழங்கலாம் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆளும் கட்சியை ஓடவிடும் துரைமுருகன்
துரைமுருகனை பொறுத்தவரை, சட்டமன்றத்தில் ஆணித்தரமாக கருத்துக்களை முன்வைக்கும் திறமை படைத்தவர். ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி அரசின் அனைத்து துறை சார்ந்த விவகாரங்கள் குறித்தும் புள்ளி விபரத்தோடு பேசி, எதிரில் இருப்போரை வாயடைத்து போக செய்யக் கூடியவர். சட்டமன்றத்திற்கு வெளியிலும் மற்ற கட்சியினர் வைக்கும் விமர்சனங்களுக்கு தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாகவும், நக்கலாகவும், யாரும் எதிர்பார்க்காத பதிலை தந்து வியப்பை ஏற்படுத்தக் கூடியவர்.
தலைமை யாருக்கு சாதகம்
அதனால் துரைமுருகனுக்கு நிச்சயம் சீட் கொடுக்கும் முடிவை தான் தலைமை எடுக்கும் என்று மூத்த நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதே சமயம் மாவட்ட நிர்வாகிகளின் கோரிக்கையை நிராகரிக்காமல் இந்த முறை காட்பாடி தொகுதிக்கு பதிலாக வேறு தொகுதியில் துரைமுருகனை போட்டியிட வைப்பார்கள் என கூறப்படுகிறது. இருந்தாலும் கட்சி தலைமை யாருக்கு சாதகமாக முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.