பட்டாசுகள் வெடித்தன.. ஆனால் பயந்து பயந்து.. இப்படித்தான் கழிந்தது இந்த வருட தீபாவளி!
வழக்கம்போல பட்டாசுகள் வெடித்துதான் தீபாவளி கொண்டாடப்பட்டது.
சென்னை: எப்படி இருந்தது இந்த தீபாவளி?
தீபாவளி என்றாலே வெடி வெடித்து கொண்டாடி வருவதுதான் நமக்கு பழக்கமான ஒன்று. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு குழந்தைகள் விரும்பி வெடிப்பது இந்த பட்டாசைதான்!
ஆனால் நீதிமன்றம் இதற்கு டைம் கொடுத்து இந்த நேரத்தில் மட்டும் வெடித்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டது. கோர்ட்டின் இந்த தீர்ப்பினை பெரும்பாலான மக்கள் ஏற்கவில்லை... விரும்பவில்லை... இன்னும் சொல்லப்போனால் மதிக்கவும் இல்லை. நீதிமன்றம் தரப்பில் சொல்லப்படும் காரணம், மாசு, சுற்றுசூழல்தான்! இதைதவிர வேறு காரணத்தை சொல்லி தடை செய்யும் அளவுக்கு கோர்ட்டுக்கு எந்த வித அவசியமும் இல்லை.
[கல்யாணத்து வர்றீங்க.. கட்டாயம் மொய் செய்றீங்க.. கிடுக்குப்பிடி உத்தரவு போட்ட புது மாப்பிள்ளை!]
மனம் ஏற்கவில்லை
வருடம் ஆக ஆக சுற்றுசூழலை காக்கப்படுகிறதோ இல்லையே, ஆனால் அதனை மாசுபடுத்தும் காரணிகள் மட்டும் அதிமாகவே உள்ளன. ஆனால் புவியியல் ரீதியாக வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. மத ரீதியான பிரச்சனைகள் எழுந்தன. என் மத விவகாரங்களில் கோர்ட் தலையிட முடியாது என பகிரங்கமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. நீதிமன்றம் இந்த தீர்ப்பினை சுற்றுசூழலை காக்கும் அடிப்படையிலேயே தந்திருந்தாலும், முழுவதுமாக ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை.
என்ன பிரயோஜனம்?
முதல் காரணம், பட்டாசு வெடிப்பதால் மட்டுமே நம் வாழுமிடம் மாசு அடைவதில்லை. வாகனங்களின் உற்பத்திகள் அதிகரித்து வருகின்றன. அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. எத்தனையோ தொழிற்சாலைகளிலிருந்து வரும் நச்சுப் புகைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. மாநகராட்சி குப்பை கூளங்களை கொளுத்துவதனால் தினந்தோறும் வரும் புகையை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆண்டுதோறும் அதிகரித்து வரும் இத்தகைய பிரச்சனைகளை தீர்க்காமல் வருஷத்துக்கு ஒருமுறை பட்டாசு வெடிப்பதில் வரும் புகையை கட்டுப்படுத்தி என்ன பிரயோஜனம் என்று தெரியவில்லை.
மாசு இல்லாத தீபாவளி
அப்படித்தான் பட்டாசு வெடிப்பதில் கட்டுப்பாடு விதித்தே ஆக வேண்டும் என்றால் பட்டாசுகளின் உற்பத்திகளில் கந்தக வீரியத்தை குறைக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதிக அளவு நச்சு மற்றும் ஒலி இல்லாத பட்டாசுகளை தயாரிக்க உத்தரவு போட்டிருக்கலாம். ஆனால் வெடிவெடிக்க நேரம் போடப்பட்டதுதான் சிக்கல் ஆகிவிட்டது. வழக்கமாக தீபாவளி அன்று அப்பப்போ பட்டாசு வெடித்து மாசுகள் கரைந்து கொண்டிருந்தன.
தீங்கு தராதா?
ஆனால் இப்படி ஒரேயடியாக 2 மணி நேரத்தில் பட்டாசு வெடித்தால் ஒட்டுமொத்தமாக புகை சுற்றிக் கொள்ளாதா? எல்லா புகைகளும் ஒன்றாக கலந்து பயங்கரமான புகை மண்டலத்தை உருவாக்கி விடாதா? இரவு நேரம் வேறு... அவ்வளவு சீக்கிரத்தில் புகைகள் கலைந்துவிடுமா? மறைந்துவிடுமா? இது மேலும் உடலுக்கு தீங்கு தராதா? டமார் என்று மொத்தமாக வரும் ஒலி மாசுகளால் தீங்கு தராதா? என நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும்.
மீறினால் சிறையா?
வேண்டுமானால் நாட்டிலேயே அதிக அளவு மாசடையும் டெல்லிக்கு மட்டும் இத்தகைய நேரத்தை ஒதுக்கி தந்திருக்கலாம். அது மட்டும் இல்லாமல், இது எல்லாவற்றையும் குழந்தைகள் சிந்திக்க மாட்டார்கள். ஆனால் தடையை மீறி பட்டாசு வெடித்தால் சிறை என்று கோர்ட் சொன்னாலும் நேற்று முன்தினம் இருந்தே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வைத்துவிட்டார்கள்.
பட்டாசு சத்தம்
இரு தினங்களாக எங்கு பார்த்தாலும் பட்டாசு வெடி சத்தம் கேட்டு கொண்டுதான் இருந்தது. இதனால் யாருக்கும் கோர்ட்டை அவமதிக்கும் நோக்கம் இல்லை என்றாலும் வேரூன்றிய ஒரு விஷயத்தை உடனடியாக மாற்றவோ, மாற்றிக் கொள்ளவோ முடியாது என்பதைதான் இது காட்டுகிறது. அதை விட முக்கியமாக அரசியல்வாதிகள், அரசியல் கட்சியினர் பட்டாசு வெடிக்க எப்போதுமே எந்தத் தடையும் விதிக்கப்பட்டதில்லை. ஆனால் மக்களின் கொண்டாட்டத்திற்குக் கட்டுப்பாடா என்பதுதான் மக்களின் ஆதங்கமாக மாறியுள்ளது.
பதில் நடவடிக்கை என்ன?
மக்கள் கலாச்சாரம் என்பது வேறு... அதனுள் நீதிமன்றம் நுழையும்போது சற்றே யோசிக்க வேண்டியுள்ளது. இப்போது கிட்டத்தட்டகோர்ட் உத்தரவு பெரும்பாலான இடங்களில் மீறப்பட்டே விட்டது. இதற்கு நீதிமன்றம் என்ன சொல்ல போகிறது? எத்தனை பேரை கைது செய்ய போகிறது? எத்தனை பேரை சிறை வைக்க போகிறது? அதற்கு மக்களின் பதில் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை இனிதான் பார்க்க வேண்டும்.
ஆதங்கம், சோர்வு
நேற்றைய தீபாவளி வழக்கம் போல உற்சாகமானதாகத்தான் இருந்தது. பட்டாசுகள் வெடிக்கத்தான் செய்தன. அனுமதிக்கப்படாத நேரத்திலும் கூட அவை வெடித்தன.. ஆனால் பயந்து பயந்து வெடித்தன. மக்களின் உற்சாகம் கடந்த காலத்தைப் போல இல்லை, சோர்வு தென்பட்டது, ஆதங்கம் காணப்பட்டது. வரும் காலத்தில் இந்த துயரம் மாறி முழுமையான உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடும் நிலை ஏற்படும் என்று நம்புவோம்.