ரஜினி இ-பாஸ் விவகாரம் - ஒன்றரை லட்சம் ஆவணங்களை ஆய்வு செய்யும் சென்னை மாநகராட்சி
ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்காமல் கேளம்பாக்கத்திற்கு சென்றிருந்தால் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கினாரா இல்லையா என்ற விவகாரம் அவரை விடாது விரட்டி வருகிறது. சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்காக ஒன்றரை லட்சம் பேருக்கு சரியான ஆவணம், காரணம் ஆகியவற்றின் அடிப்படையில் இ- பாஸ் வழங்கியுள்ளோம். அந்த ஒன்றரை லட்சம் ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர்தான் ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கினாரா? இல்லையா என்று தெரியவரும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்து காரில் செல்லும் போட்டோ ஒன்று இரு தினங்களுக்கு முன்பு வைரலானது. லைன் இன் லம்போர்கினி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர் ரஜினி ரசிகர்கள். ரஜினிகாந்த் எங்கே போனார் என்று பலரும் கேட்டனர். அதற்கு விடை இரவில் கிடைத்தது.
போயஸ்கார்டன் பங்களாவில் பல மாதங்கள் தங்கியிருந்ததால் ஒரு மாற்றத்திற்காக கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் மகள், மருமகன், பேரனுடன் ஓய்வெடுக்க போயிருக்கிறார் ரஜினி. இதற்குத்தான் காரில் மாஸ்க் போட்டுக்கொண்டு காரில் போயிருக்கிறார்.
கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ரஜினிகாந்த் அவ்வப்போது வாக்கிங் போகும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
கேளம்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கிறது. இப்போது ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு போக இ பாஸ் வாங்க வேண்டும். இது பற்றிய சர்ச்சையில் ரஜினிகாந்த் சிக்கியிருக்கிறார்.
கந்த சஷ்டி இழிவுக்கு கண்டனம்...அந்த இரண்டையும் ரஜினி மறந்தது ஏன்?
ரஜினி சென்னை மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனது பண்ணை வீடு அமைந்துள்ள கேளம்பாக்கத்துக்கு போக இ பாஸ் வாங்கியிருக்கிறாரா என்று சென்னை மநகராட்சி ஆணையரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரகாஷ், அது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.
இ - பாஸ் வேண்டி மொத்தம் 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில், ஒன்றரை லட்சம் பேருக்கு சரியான ஆவணம், காரணம் ஆகியவற்றின் அடிப்படையில் இ- பாஸ் வழங்கியுள்ளோம். அந்த ஒன்றரை லட்சம் ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர்தான் ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கினாரா? இல்லையா என்று தெரியவரும் என்று தெரிவித்தார்.
இன்றும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் கூறிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ரஜினிகாந்த் தனது பெயரிலோ அல்லது டிரைவரின் பெயரிலோ இ பாஸ் வாங்கியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்காமல் பயணம் செய்திருந்தால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார். காரில் போகும் போட்டோவை போட்டு ட்ரெண்ட் ஆக்கிய ரஜினிகாந்த். இப்போது இ பாஸ் விவகார சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.