அசோக்நகரில்.. நடுரோட்டில் சேஸிங்.. கே.எஸ்.அழகிரி பேத்தியின் கன்னத்தில் பளார் விட்ட அதிகாரி.. என்னவாம்
கேஎஸ் அழகிரியின் பேத்தியின் கன்னத்தில் ஐஏஎஸ் அதிகாரி அறைந்துவிட்டார்
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரியின் பேத்தியின் கன்னத்தில், ஐஏஎஸ் அதிகாரி அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை அசோக்நகரில், வாகனத்தை முந்தி செல்வதில், ஐஏஎஸ் அதிகாரியின் மனைவிக்கும், தமிழக காங்கிரஸ் தலைவரின் பேத்திக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை உதவியாளராக பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன்.. இவரது மனைவி விஜயலட்சுமி..
அழகிரி பேத்தி
இவர் காரில் தன்னுடைய குழந்தையுடன் அசோக்நகர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். இவருக்கு பின்னால், மூத்த தலைவர் கேஎஸ் அழகிரியின் பேரப்பிள்ளைகள் இன்னொரு காரில் அதே ரோட்டில் சென்றுள்ளனர்... இதில், முன்னாடி சென்று கொண்டிருந்த காரை ஓவர்டேக் செய்ய, அழகிரி பேரப்பிள்ளைகளின் கார் முயன்றுள்ளது.. ஆனால், அதற்கு வழிவிடாமல், ஐஏஎஸ் அதிகாரியின் கார் முந்தி சென்றுள்ளது.. இதனால், நடுரோட்டிலேயே ஓவர்டேக் செய்வதில் இவர்களுக்குள் சேசிங் நடந்து, அது வாக்குவாதமாக முற்றிவிட்டது.
வாக்குவாதம்
இந்த வாக்குவாதமானது, கைகலப்பு வரை போய்விட்டது.. இதனால், ஒருகட்டத்தில் பொறுமையிழந்த, கேஎஸ் அழகிரியின் பேத்தி, கண்ணனின் மனைவியை தாக்கியதாக தெரிகிறது.. இந்த ஆத்திரத்தில், ஐஏஎஸ் அதிகாரி கண்ணன், அழகிரியின் பேத்தியை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.. கடைசியில் இந்த விவகாரம் அசோக்நகர் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுவிட்டது.. இரு தரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்த முயன்றனர்.. ஆனால், அதற்குள் விஷயம் கேஎஸ் அழகிரி வரை சென்று, அவரும் ஸ்டேஷனுக்கு விரைந்து வந்துவிட்டார்.
கன்னத்தில் பளார்
இறுதியில், ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.. அசோக்நகர் பகுதி, எப்போதுமே போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி என்பதால் இந்த சம்பவம் பரபரப்பாகிவிட்டது.. அத்துடன், அழகிரியின் பேத்தியையே, அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைந்த நிகழ்வும் அதிர்ச்சியை கிளப்பிவிட்டு வருகிறது.. ஆனால், ஓவர்டேக் செய்வது உட்பட எந்த தகராறு வாகன ஓட்டிகளுக்குள் நடந்தாலும், இதனால் பாதிக்கப்படக்கூடியது என்னவோ கடைசியில் அப்பாவி பொதுமக்கள்தான்..
டிரைவர்கள்
இப்படித்தான் திண்டுக்கல்லில் சில நாட்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. ஒரு அரசு பஸ் டிரைவருக்கும், டிராக்டர் டிரைவருக்கும் ஓவர்டேக் செய்வதில் போட்டி வந்துள்ளது.. இது தகராறாக வெடித்து, 2 டிரைவர்களுமே கடுமையாக தாக்கி கொண்டார்கள்.. இந்த தகராறில், பயணிகள் கடுப்பாகி ஆத்திரமாகி விட்டனர்.. அதைவிட கொடுமை, இவர்கள் சண்டையால், அங்கே வந்த ஆம்புலன்ஸுக்கு வழிகிடைக்காமல் போய்விட்டது.. அந்த ஆம்புலன்ஸ் சத்தம் காதை கிழித்தும்கூட 2 டிரைவர்களும் சண்டையை நிறுத்தவில்லை என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.