வெள்ளக்கோவில் சாமிநாதன் விலகி விட்டாரா?
Recommended Video
சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் அணி பதவியை கொடுக்கும் வகையில் வெள்ளக்கோயில் சாமிநாதன் தனது திமுக இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவின் இளைஞர் அணிக்கு உதயநிதியை செயலர் ஆக்குங்கள் என்று கேட்டு பல மாவட்டங்களில் இருந்து தலைமைக்கு திமுகவினர் கடிதம் எழுதி வந்தனர்.
நீண்ட காலமாக திமுகவின் இளைஞர் அணித் தலைவராக ஸ்டாலின் பொறுப்பு வகித்து வந்தார். ஸ்டாலினின் தலைமையில் இளைஞர் அணி நன்றாக செயல்பட்டு வந்தது. ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது.
ஆனால் வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது, அப்போதே பல தரப்பில் இருந்தும் விமர்சனங்களை உருவாக்கியது. அதோடு வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கும், துணை செயலாளர்கள் அன்பில் மகேஷ், தாயகம் கவி, அசன் முகமது ஜின்னா, ஜோயல், பாரி ஆகியோருக்கும் முட்டல் மோதலாகவே இருந்து வந்தது. இதனால் சாமிநாதனை இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தி.மு.கழகத்தில் கலகக் குரல்கள் கேட்க துவங்கியிருந்தன.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மகனும், முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த மக்களவைத் தேர்தலின்போது திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்காகத் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களை வென்ற நிலையில் உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி கொடுக்க வேண்டுமென திமுகவிலிருந்து குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. திருச்சி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களும், திமுகவின் துணை அமைப்புகளும் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றித் தலைமைக்கு அனுப்பிவைத்தன.
இதனையடுத்து திருச்சி திமுக பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் முன்னிலையில் மேடையேறினார், உதயநிதி. அந்தக் கூட்டத்தில், சூரியவம்சம் சரத்குமார் பாணியில் "எந்தப் பொறுப்பையும், பதவியையும் எதிர்பார்க்கவில்லை, அதற்காக நான் பிரச்சாரம் செய்யவும் இல்லை. திமுகவின் கடைக்கோடி தொண்டர்களில் ஒருவன் என்பதே தனக்கு மிகப்பெரிய பெருமை அந்த ஒரு பொறுப்பே போதும்" என்றும் பேசியிருந்தார்.
இந்த நிலையில் உதயநிதிக்கு ரூட் கிளியர் செய்யும் பொருட்டே சாமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதே வேளையில் சாமிநாதனுக்கு கட்சியில் வேறொரு முக்கியமான பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.