ஸ்டாலின், கமல், அன்புமணியின் கிராமத்து அத்தியாயம்.. மக்கள் யார் பக்கம்?
கிராம சபை நடத்தும் கட்சிகளில் மக்கள் செல்வாக்கு யாருக்கு கிடைக்க போகிறது?
Recommended Video
சென்னை: கிராமங்களை தேடி சென்று கொண்டிருக்கும் ஸ்டாலின், கமல், அன்புமணி போன்றோரின் பயணங்கள் ஆர்வத்தைத் தூண்டியுள்ளன. இவர்களில் யாருக்கு கிராமப்புற மக்களின் ஆதரவு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
பொதுவாழ்க்கை என்று வந்துவிட்டவர்களுக்கு மக்களை சந்திப்பது என்பது தினமும் நடக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் நம்ம ஊரில் அது அரசியல் வியூகத்தில் ஒன்றாக கலந்து விட்டிருப்பதுதான் வேதனை!!
தேர்தல் நெருங்கும்போதுதான் மக்கள் ஞாபகம் வரும், கிராமங்கள் நினைவுக்கு வரும்.. பெண்கள் நினைவுக்கு வருவார்கள். பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வும் வரும்.
ஏன் இந்த இடைவெளி?
காலம் காலமாக கிராம சபை என்பது அரசியல் அமைப்பில் இருக்கிறது. காந்தி காலத்திலிருந்தே. ஆனால் அதை கிட்டத்தட்ட அரசியல்வாதிகளும் மறந்து விட்டார்கள்.. ஏன். கிராம மக்களே கூட அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கிராம சபைகள் கிட்டத்தட்ட கோர்ட்டுகளுக்கு சமம். அதனை இத்தனை வருடங்கள் இடைவெளியை விட்டுவிட்டு இப்போது அதனை கையில் எடுப்பது ஆச்சரியம் தரவில்லை.. காரணம், தேர்தல் நெருங்கி விட்டதால் இதெல்லாம் நடக்கத்தான் செய்யும்.
டீ-ஷர்ட்கள்
முதலில் ஸ்டாலினை எடுத்துகொண்டால், நமக்கு நாமே செல்லும்போது, மக்களிடம் அதிகமாக ஈர்த்தார். கருணாநிதியின் மகன் இவ்வளவு எளிமையானவரா? இவ்வளவு ஜாலியானவரா? இவ்வளவு இயல்பானவரா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். விதம் விதமான டீ-ஷர்ட், பேன்ட், ஷூ, கூலிங் கிளாஸ் என்று தோற்றத்தையே மாற்றி கொண்டு மக்களை அணுகவும் அந்த பார்முலா ரொம்ப அழகாகவே எடுபட்டு போனது.
ஒத்தை ஆள்
ஆனால் அதே சமயத்தில் மற்றொரு பக்கம் அன்புமணி ஆகிய நான் என்ற முழக்கத்துடன் பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கிளம்பினார். அவருக்கு திமுகவுக்கு நிகரான கூட்டம், வடமாவட்டங்களில் கூடி திமுக தரப்பை அதிர வைத்தது. திரளான கூட்டத்தில், பெரிய மேடையில் ஒத்தை ஆளாக அன்புமணி நடமாடிக் கொண்டே மக்களிடம் இயல்பாக பேசியது அனைவரையும் ஈர்த்தது. மக்களை கேள்வி எழுப்ப சொல்லி அதற்கு அன்புமணி பதிலளித்தது புதிய டிரெண்ட் ஆனது.
திண்ணைக் கூட்டங்கள்
அன்புமணி இதை தேர்தலோடு நிறுத்தவில்லை. மாறாக தொடர்கிறார். இன்றும் மக்களை சந்திப்பதை விடவில்லை. மக்களிடம் ஒரு தொடர்பு வைத்திருப்பதை எப்போதுமே பலமாக பார்க்கிறது பாமக. தேர்தலை மட்டும் கணக்கில் கொள்ளாமல் டாக்டர் ராமதாஸ் நடத்திய திண்ணைக் கூட்டங்களை இதற்கு முன்னோடியாக சொல்லலாம். சாதீய ரீதியான அடையாளத்தை பிற கட்சிகள் பாமக மீது சுமத்தினாலும் கூட மக்களை சந்திப்பதை பாமக ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து கடைப்பிடிப்பதை பாராட்டியாக வேண்டும். குறைந்தது மக்களை தொடர்ந்து சந்திக்கும் கட்சியாக பாமக மட்டுமாவது இருக்கிறதே என்பது ஆறுதலான விஷயம்தான்.
கிராம சபை
ஆனால் இதிலிருந்துதான் கமல் மாறுபடுகிறார். பொதுமக்கள் என்பதையும் தாண்டி கிராமங்களுக்குள் ஊடுருவுகிறார். விவசாயிகளிடம் நெருங்குகிறார். கிராம சபை என்ற மறந்துபோன, மறக்கடிக்கப்பட்ட ஒரு விஷயத்தை கையில் எடுக்கிறார். உண்மையில் கிராம சபை என்ற அருமையான விஷயத்தை, மறந்து போனதை கையில் எடுத்துக் கொடுத்து இங்கிருக்கிறது உங்களது சக்தி என்பதை கிராம மக்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளார் கமல். இங்குதான் கமல் மற்ற தலைவர்களை விட வேறுபடுகிறார்.
புட்டு புட்டு வைப்பார்கள்
திமுக, பாமக, மநீம கட்சி தலைவர்கள் மக்களை தேடி அலைந்து ஓடுவதை குறை சொல்லவல்லை. ஆனால் அரசியல் லாபம் உள்ளதா? மக்கள் செல்வாக்கு வருகிறதா என்பது ஆராயப்பட வேண்டி உள்ளது. திமுகவின் ஊராட்சி, ஒன்றியங்களின் கிளைக்கழகங்களை கூப்பிட்டு அங்கு பிரச்சனைகள் என்ன என்று கேட்டாலே அவர்களே இன்றைய அவலத்தை புட்டு புட்டு வைத்து விடுவார்கள். அதனால் ஸ்டாலினின் இந்த கிராம சபை பயணத்தில் எந்த அளவுக்கு லாபம் கிடைக்கும் என்று தெரியவில்லை.
அன்புமணியா? கமலா?
அன்புமணியா? கமலஹாசனா? என்று பார்த்தால், அன்புமணியுடன் சாதிய போர்வை கூடவே வருகிறது என்பதால் அதனை ஒரு சாரார் மட்டுமே ஏற்கவேண்டி உள்ளது. அனைத்து தரப்பினரும் ஆதரிக்கும் கட்சியாக பாமக மக்கள் மனதில் ஒட்டவில்லை என்பது யதார்த்த செயல்பாடாக உள்ளது என்றாலும், அக்கட்சி தன் செல்வாக்கை இழக்காமல் காத்து வருகிறது.
புதுமை - மய்யம்
ஆனால் கமலை பொறுத்தவரை சாதி தெரியவில்லை, தேர்தலை முன்னிறுத்தி மக்களிடம் செல்லவில்லை, மக்கள் பிரச்சனைகளை மய்யம் தீர்த்து வருகிறது என்ற பெயரை பெற்றுள்ளது, அதுவும் இல்லாமல் மற்ற கட்சிகளிடம் இல்லாத புதுமை என்று மய்யத்திற்கு பரவலான கருத்துகள் உள்ளன. மாற்றம் என்று சொல்வது எளிது! ஆனால் அதை மாறுபட்ட செயலால் மாற்றி கொண்டிருப்பதில் ஸ்டாலின், அன்புமணியைவிட கமலுக்கு ஓரளவு முன்னால் போய்க் கொண்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.