பல்லாவரம் அருகே பரபரப்பு.. சர்ச்சுக்குள் புதைக்கப்பட்ட உடல்.. போலீஸ் குவிப்பு!
Recommended Video
சென்னை: சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் சர்ச்சில் அடுக்கு கல்லறை அமைத்து இறந்தவர் உடலை புதைக்க எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, அதில் இருந்த உடலை போலீசார் வருவாய்துறையினர் அப்புறப்படுத்தினர்.
சர்ச்சில் அடுக்கு கல்லறை அமைத்து இறந்தவர் உடலை புதைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே பொழிச்சலூர் விநாயகர் கோவில் தெருவில் கத்தோலிக்க சர்ச் ஒன்று உள்ளது கடந்த 18-ந்தேதி உடல் நலம் இல்லாமல் இறந்த பம்மலை சேர்ந்த லோனப்பன் (வயது72) என்பவர் உடலை இங்கு அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது
இந்து மக்கள் கட்சி புகார்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் தாம்பரம் கோட்டாச்சியர் மற்றும் பல்லாவரம் தாசில் தார் அலுவலகத்தில் புகார் செய்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று மாலை வருவாய்துறையினர் மற்றும் சங்கர் நகர் போலீசார் சர்ச்சிற்கு திடீர் சோதனை நடத்த வந்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
அப்போது சர்ச்சின் பின்பகுதியில் உள்ள அறை ஒன்றில் உடல்களை உள்ளே வைத்து அடக்கம் செய்யும் வகையில் அடுக்கு கல்லறை கட்டப்பட்டிருந்தது. அதில் லோனப்பன் உடலை வைத்து சிமெண்டால் பூசியதும் தெரியவந்தது. உரிய அனுமதி இல்லாமல் இறந்த உடல்களை புதைக்க கூடாது என வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சர்ச் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.
கல்லறையில் அடக்கம்
இதனைத்தொடர்ந்து அந்த அடுக்கு கல்லறையில் இருந்து லோனப்பன் உடலை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் வெளியில் எடுத்து பொழிச்சலூர் பகுதியில் வழக்கமாக கிறிஸ்துவர்கள் அடக்கம் செய்யும் கல்லறைக்கு கொண்டு சென்றனர்.
எச்சரிக்கை
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் உரிய அனுமதி இல்லாமல்அடுக்கு கல்லறைகள் அமைத்து உடல்களை புதைக்க கூடாது எனவும் வருவாய் துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவத்தால் பொழிச்சலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.