இப்போதானப்பா சின்னம் ஒதுக்குனாங்க.. அதுக்குள்ள இப்படியா.. மற்ற கட்சிகளை தெறிக்கவிடும் அமமுக
Recommended Video
சென்னை: அடேங்கப்பா..! என்ன ஒரு வேகம், என்ன ஒரு துரிதம், என்ன ஒரு தந்திரம்..! இன்று காலையில் ஒதுக்கப்பட்ட ஒரு சின்னம், அதற்குள்ளாக மாநிலம் முழுக்க சுவர்களின் மீது மின்னிக் கொண்டு உள்ளது.
அந்த சின்னம் பரிசுப் பெட்டி. சின்னம் ஒதுக்கப்பட்ட கட்சி சசிகலா தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.
இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டசபை தொகுதிகள், மற்றும் லோக்சபா தேர்தலில் அமமுக வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.
உச்சநீதிமன்றம்
அனைத்து வேட்பாளர்களுக்குமே பொதுவாக குக்கர் சின்னம் வழங்கப்பட வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் அதற்கு சம்மதிக்காத நிலையில், வேறு ஏதேனும் ஒரு பொதுச் சின்னமாவது ஒதுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.
ஆஹா.. இது "அம்மா"வின் ஆசிர்வாதமேதான்.. "பரிசுப் பெட்டி"க்காக அகமகிழும் அமமுக.. விஷயம் இருக்கு!
நம்பிக்கை
குக்கர் சின்னம், ஏற்கனவே மக்கள் மனதில் ஓரளவுக்கு பதிவாகி இருந்ததால், அந்த சின்னம் கொடுக்கப்படாதது தினகரன் அணிக்கு பலவீனம் என்று சொல்லப்பட்டது. ஆனால் தினகரன் கட்சியினரோ ஜெயலலிதாவின் ஆர்கே நகரிலேயே நாங்கள் வெற்றி பெற்றவர்கள், எங்களுக்கு எந்த சின்னத்தை ஒதுக்கினாலும், உடனடியாக அதை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி வாக்கு வேட்டையாடுவோம் என்று மிகுந்த நம்பிக்கையோடு தெரிவித்து வந்தனர்.
பம்பரமாக சுழலும் நிர்வாகிகள்
இந்த நிலையில் இன்று காலை தினகரன் அணியினருக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களிலேயே, தமிழகம் முழுக்க உள்ள சுவர்களில் பரிசு பெட்டி சின்னம் மின்னிக் கொண்டு உள்ளது. அந்த அளவுக்கு களத்தில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள் மிகவும் பம்பரமாக சுழன்று, வேலை செய்து வருகிறார்கள் என்பது இதன் மூலமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள்
மிகக் குறுகிய காலமே இருப்பதால் பரிசுப் பெட்டி சின்னத்தை எந்த அளவுக்கு மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க முடியுமோ அந்த அளவு சேர்க்க வேண்டும் என்பதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முனைப்பு காட்டி வருகிறது என்பதற்கு இது ஒரு அடையாளம். மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகன், டேவிட் அண்ணாதுரை, ஆரணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தமிழன் ஆகியோரது பெயர்கள் பொறிக்கப்பட்ட விளம்பரங்களுடன், பரிசு பெட்டி சின்னம் சுவர்களில் இடம்பெற்றிருப்பதை நீங்களே படங்களில் பார்க்கலாம். தினகரன் அணியினரின் இந்த வேகம் மற்ற கட்சிகளுக்கு கண்டிப்பாக கிலியூட்டும் என்பதில் ஐயமில்லை.