ஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி!
சென்னை: கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய இடைக்கால தீர்ப்பு தமிழகத்திலும் எதிரொலிக்கிறது. இன்றைய தீர்ப்பானது தகுதி நீக்கத்துக்குள்ளான தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களுக்கு புலம்பலை கொடுத்திருக்கிறது.
கர்நாடகாவில் 2010-ம் ஆண்டு எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ராஜினாமா கடிதம் கொடுத்த 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து தீர்ப்பு அளித்தது.
இதே தீர்ப்பின் அடிப்படையில்தான் ஆளுநரை சந்தித்து மனு கொடுத்த காரணத்துக்காக மட்டுமே தகுதி நீக்கம் செய்த தமிழக சபாநாயகர் தனபால் நடவடிக்கையும் ரத்தாகும் என எதிர்பார்த்தனர் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள். ஆனால் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து 18 எம்.எல்.ஏ.க்களும் உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டுக்கு செல்லவில்லை. போபையாவுக்கு எதிரான வழக்கின் அடிப்படையில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என 18 பேருக்கும் தீர்ப்பு கிடைத்திருக்கவே வாய்ப்பு இருந்திருக்கும் என்பதை இன்றைய நிகழ்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
ராஜினாமா செய்வது என முடிவெடுத்த 16 கர்நாடகா எம்.எல்.ஏக்களையுமே கொறடா உத்தரவு கட்டுப்படுத்தாது என்கிறது உச்சநீதிமன்றம். கொறடா உத்தரவே பிறப்பிக்கப்படாத ஒரு சூழலில்தான் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா கூட செய்யவில்லை; ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியை மட்டும் தெரிவித்தனர்.
நிச்சயமாக தினகரன் தரப்பு மேல்முறையீட்டுக்கு போயிருந்தால் 18 எம்.எல்.ஏக்கள் பதவியும் தப்பி இருக்கும் என்பதைத்தான் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிப்படுத்துகிறது. இதனால்தான் தினகரன் ஆதரவு முகாம் புலம்புகிறது.