4 தொகுதி இடைத்தேர்தல்.. அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி ஒதுக்கீடு.. தினகரன் கோரிக்கை ஏற்பு!
தமிழகத்தில் நடக்க உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் நடக்க உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலூர் தொகுதி தவிர்த்து மற்ற தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதேபோல் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் அமமுக வேட்பாளர்கள் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டார்கள்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் கொடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தெரிவித்தது. ஆனால் அமமுகவிற்கு பொதுசின்னம் ஒன்றை கொடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தொடரும் போராட்டம்.. இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம்?.. சசிகலா சீராய்வு மனு!
தேர்தல் ஆணையம் என்ன
இதனால் தேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசுப் பெட்டி சின்னத்தை வழங்கியது. இந்த சின்னம் கிடைத்தது டிடிவி தினகரன் தரப்பிற்கு பெரிய மகிழ்ச்சியை அளித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சின்னத்தில் அமமுக வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அவர்கள் சுயேச்சை வேட்பாளர்களாக கருதப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்ன செய்தனர்
இதையடுத்து தமிழகத்தில் நடக்க உள்ள அடுத்த 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கும் பரிசுப் பெட்டி சின்னத்தை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்தார். தற்போது அவரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பரிசுப் பெட்டி சின்னம்
அதன்படி வரும் தமிழகத்தில் நடக்க உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிடிவி தினகரனின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
என்ன மகிழ்ச்சி
மே 19ம் தேதி தமிழகத்தில் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் பலர் இந்த சின்னம் கிடைத்ததை கொண்டாடி வருகிறார்கள். தங்களுக்கு இந்த சின்னம் நிரந்தரமாக கிடைக்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.