அமமுக அத்தியாயத்துக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கும் திமுக, அதிமுக
Recommended Video
சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இறுதி அத்தியாயத்தை திமுகவும் அதிமுகவும் எழுதி வருகின்றன.
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை சுமார் 10 ஆண்டுகாலம் அரசியலைவிட்டே ஒதுக்கப்பட்டிருந்தவர் தினகரன். ஜெயலலிதா மறைந்த பின்னரும் கூட சசிகலாவின் உறவினர் என்கிற அடிப்படையில் அவருடன் ஒட்டிக் கொண்டு மட்டும்தான் இருந்தார் தினகரன்.
அப்போதைய அதிமுகவுக்கும் தினகரனுக்கும் ஒரு தொடர்புமே இல்லாமல் இருந்தது. சசிகலா முதல்வராக முயற்சித்தபோதும் கூட தினகரனுக்கு அதிமுகவில் இடம்தரப்படவில்லை.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குப் போகும் போது அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக தினகரனை சசிகலா நியமித்தார். தினகரன் மீண்டும் அரசியலில் கால்பதிக்க, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கினார். அவருக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தொப்பி அணிந்து கொண்டு பிரசாரம் செய்தனர்.
தினகரன் அணி
ஆனால் அத்தேர்தல் ரத்தானது. இதன்பின்னர் தினகரனுக்கும் முதல்வர் பதவி ஆசை வந்தது. தமக்கான ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கி ஆளுநரை பார்த்து மனு கொடுக்க வைத்தார். சசிகலாவின் கூவத்தூர் பாணியில் புதுவை, குடகுக்கு எம்.எல்.ஏக்களை அழைத்து சென்று அடைத்து வைத்தார்.
ஆர்.கே.நகரில் அமோக வெற்றி
ஒருகட்டத்தில் ஓபிஎஸ்- எடப்பாடி அணிகள் இணைய மீண்டும் தினகரனை ஒதுக்கி வைத்தது அதிமுக. ஆனால் தாங்களே உண்மையான அதிமுக என தினகரன் பேச அவரை நம்பியும் நிர்வாகிகள், தொண்டர்கள் அணிதிரண்டனர். பின்னர் ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். திமுகவின் டெபாசிட்டை பறிகொடுக்க வைத்தார்.
தினகரனின் அதீத நம்பிக்கை
இதனால் அதிமுக தொண்டர்களிடையே தினகரனுக்கு மரியாதை கூடியது. ஆனால் தினகரனோ தம்மை எம்.ஜி.ஆரைவிட செல்வாக்கான நபர் என கருதி செயல்பட தொடங்கினார். தம்மை நம்பி வந்த நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்து தம்மை அன்னியப்படுத்திக் கொண்டார். முடிவு எடுக்கும் இடங்களில் தினகரன் குடும்பம் தலையிட்டது.
வீழ்ந்த விக்கெட்
இதனால் மெல்ல மெல்ல தினகரன் கூடாரம் சலசலப்புக்குள்ளானது. லோக்சபா தேர்தலுக்கு முன்னர் செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவியது தினகரனுக்கு மரண அடியாக பார்க்கப்பட்டது. பின்னர் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்கள் மக்கள் கொடுத்த சம்மட்டி அடிதான் இப்போதைக்கு தினகரனின் அமமுகவுக்கு முடிவுரையாக எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கூண்டோடு எஸ்கேப்
தினகரன் தேர்தல் முடிந்த உடனேயே அமமுகவை தனிக்கட்சியாக்கினார். ஆனால் தொண்டர்களோ இனியும் அமமுகவில் இருந்தால் அரசியல் எதிர்காலம் சூனியம்தான் என உணர்ந்து கொத்து கொத்தாக அதிமுகவுக்கே திரும்ப தொடங்கினர். செந்தில் பாலாஜி, கலைராஜன் என பெருந்தலைகள் திமுகவை நோக்கி நகர்ந்தன.
திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன்
இந்நிலையில் தற்போது தினகரனுக்கு பெரும் பலமாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுக்கு தாவிவிட்டார். தற்போது பழனியப்பன், வெற்றிவேல், பெங்களூரு புகழேந்தி இவர்கள்தான் தினகரனுடன் இருப்பவர்கள். வெற்றிவேலும் புகழேந்தியும் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்கள். பழனியப்பனுக்கு ஆதரவாளர்கள் உண்டு. பழனியப்பனும் கூட அதிமுக, திமுகவுக்கு தாவலாம் என பேச்சுகள் வெளிப்படுகின்றன.
அமமுகவின் முடிவுரை
இருப்பினும் தாம் தினகரனை விட்டு போகப்போவதில்லை என திட்டவட்டமாக கூறியிருக்கிறார் பழனியப்பன். தற்போதைய நிலையில் அங்கிட்டு திமுகவும் இங்கிட்டு அதிமுகவும் மொத்தமாக அமமுகவுக்கு முடிவுரை எழுதிவருகின்றனர் என்பதுதான் யதார்த்தம்.