ஸ்டாலினை நம்பி பயனில்லை.. களத்தில் இறங்கிய தினகரன்.. வலையில் விழும் அதிமுக எம்.எல்.ஏக்கள்
சென்னை: அதிமுக அரசை கவிழ்ப்பதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டாததால் அமமுக பொதுச்செயலர் தினகரனே களத்தில் இறங்கியிருக்கிறாராம். தற்போதைய நிலையில் மேலும் 2 எம்.எல்.ஏக்கள் தினகரன் அணியில் இணைந்தும்விட்டனராம்.
கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்கப் போவதில்லை என மேடைதோறும் பேசியவர் மு.க.ஸ்டாலின் . ஆனால் கிச்சன் கேபினட் நெருக்கடியால் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளுக்கு ஓகே சொன்னார் ஸ்டாலின்.
அதிமுக தலைமை பதிலடி
இதையடுத்து ஒரு அதிமுக எம்.எல்.ஏ.வை வளைத்தால் இத்தனை கோடி கமிஷன் என புதிய நபர்கள் களமிறக்கப்பட்டனர். இந்த சபலத்தில் எம்.எல்.ஏக்கள் சிக்குவதை தெரிந்து கொண்ட அதிமுக தலைமை தரப்பு, 2 மடங்கு பேரம் பேசியது.
ஏமாந்த தினகரன்
இதனால் திமுகவின் முயற்சியில் பெரும் முட்டுக்கட்டை விழுந்தது. எப்படியும் திமுக ஆட்சியை கவிழ்த்துவிடும்.. நமக்கு செலவே இல்லை என நினைத்துக் கொண்டிருந்த அமமுக பொதுச்செயலர் தினகரனுக்கு இது பெரும் ஏமாற்றமானது.
அமமுகவில் இருந்து விலகல்
அத்துடன் அமமுக கூடாரத்தை விட்டு நாள்தோறும் அதிமுகவை நோக்கி படையெடுப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் செம கடுப்பில் இருக்கும் தினகரன், நானே ஆட்சியை கவிழ்க்கிறேன் என கோதாவில் குதித்துவிட்டாராம்.
பெருகும் ஆதரவு
ஏற்கனவே தினகரனுக்கு 3 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக உள்ளனர். இந்த 3 எம்.எல்.ஏக்களுக்கும் அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. இந்த எம்.எல்.ஏக்கள்தான் மேலும் 2 எம்.எல்.ஏக்களை தினகரன் அணிக்கு 'பேரம்' பேசி அழைத்து வந்துள்ளனராம்.
அனேகமாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் நாடகங்கள்தான் இனிவரும் நாட்களில் தலைப்பு செய்தியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.