பெருசுகளை ஓரம் கட்டு.. இளசுகளை இழு.. தினகரன் திட்டம்.. ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு!
சென்னை: கரைந்து கொண்டிருக்கும் அமமுகவை கரையேற்ற இளைஞர்களுக்கு பதவி முதியவர்களுக்கு ஓய்வு என்ற புதிய திட்டத்துடன் களமிறங்கப் போகிறார் தினகரன்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அமமுகவில் இருந்து ஒவ்வொரு நிர்வாகிகளாக வேறு கட்சிகளுக்கு ஓட்டம் பிடித்து வருகின்றனர். பணபலம், படைபலம் என்று அமமுகவை தாங்கி வந்த செந்தில் பாலாஜி, இசக்கி சுப்பையா, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் அமமுகவில் இருந்து வெளியேறிவிட்டதால் அமமுக கூடாரமே கலகலத்து போய் காணப்படுகிறது. இந்த நிலையில்தான் கட்சியை எப்படியேனும் பலப்படுத்தி ஆக வேண்டும் என்று நினைக்கிறார் தினகரன். இதற்காக மீதமிருக்கும் கட்சி நிர்வாகிகளோடு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
தங்க தமிழ் செல்வன் வெளியேறிய பிறகு முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வெளியேறப்போகிறார் என்ற செய்தி அமமுக வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பழனியப்பனும் அதிமுகவில் அல்லது திமுகவில் விரைவில் ஐக்கியமாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தருமபுரி, சேலம் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் நேற்று முன்தினம் தருமபுரிக்குச் சென்றார்.
நேற்று காலை பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பழனியப்பன் உள்ளிட்ட சில மூத்த நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தியுள்ளார் தினகரன். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசியவர் "நம்ம கட்சியில இருந்து திமுக, அதிமுகவுக்கு போகப் போறவங்க எத்தனை பேருன்னு லிஸ்ட் போட்டு வெச்சிருக்கேன். அதிகபட்சமா 50 பேர் வரைக்கு போறதுக்கு ரெடியா இருக்காங்க. போறவங்க போனா போகட்டும்.
உன் போட்டோ இதுல இல்லையேடா.. ஒன்னு கூட எடுக்காம விட்டுட்டேனே.. கதறி அழுத தாய்!
நம்ம கூட்டத்துல கலந்துகிறவங்க பாதிக்கு மேல இளைஞர்கள்தான் இருக்காங்க. அதனால 50 வயதைத் தாண்டி கட்சி பொறுப்புல இருக்குற பெரும்பாலானவங்களுக்கு இனி வாய்ப்பு கொடுக்குறதில்லேன்னு முடிவு பண்ணிருக்கிறேன்" என்று 50 வயதுக்கு மேற்பட்ட பழனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகளை வைத்துக் கொண்டே தடாலடியாக பேசியுள்ளார். இதைக்கேட்டதும் பழனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் திகைத்துள்ளனர்.
இதை உணர்ந்துகொண்ட தினகரன் நீங்கள் உள்ளிட்ட சிலருக்கு இதில் விதிவிலக்கு உண்டு என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசியவர் "பாஜகவை பற்றி நமக்கு எந்த கவலையும் இல்லை. நம்ம கட்சியில 30 வயசுல இருந்து 45 வயது வரைக்கும் இருக்குற துடிப்பா செயல்படுறவங்களுக்குப் பதவி தரலாம்னு இருக்கேன். நமக்கு நம்ம கட்சியைப் பலப்படுத்தணும்கிறதுதான் முக்கியம். அமமுக இப்ப எப்படி இருக்குங்கிறது முக்கியமில்ல. இன்னும் 10 வருஷத்துக்கு அப்புறம் எப்படி இருக்கப்போவுது அப்படிங்கறதுதான் முக்கியம். அதுக்காக இப்பவே ப்ளான் பண்றேன்" என்று தனது பலே பிளானை தெரிவித்திருக்கிறார் தினகரன்.
தினகரனின் இந்த பலே பிளானை எல்லாம் கேட்கும்போது 'ஓப்பனிங்' எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா 'பினிஷிங்' சரியில்லையேப்பா என்ற வடிவேலு பட டயலாக் தான் நினைவுக்கு வருகிறது.