சும்மா கிர்ரு கிர்ரு கிர்ரு.. பழனியப்பன் சொய்ங்ங்ங்... அ.ம.மு.க.வுக்குள் அமளிதுமளி பஞ்சாயத்து!
Recommended Video
சென்னை: வடிவேலு 'ஒரேயொரு பாம்! டோட்டல் சிட்டியும் கிளோஸ்' என்று செம்ம காமெடியாய் சொல்வது போல் சொல்ல வேண்டுமென்றால்... ஒரேயொரு எலெக்ஷன், மொத்த தினகரன் கட்சியும் பணால் என்றுதான் சொல்ல வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் விழுந்த தோல்வி அடியின் மூலம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விழிபிதுங்கி கிடக்கிறது. காரணம், நிர்வாகிகள் தொடர்ந்து கழன்று கொண்டே இருப்பதால் கட்சி கரைந்து காணாமல் போவதால்தான்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பெற்றது போல் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பெரும் வெற்றியை பெறுவோம் என தினகரன் நினைத்தார். தனித்து தேர்தலை சந்தித்த அவர் ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான கோடிகளை கொட்டி செலவு செய்தார். ஆனால் மிக கடுமையான தோல்வியை சந்தித்தது கட்சி. கிட்டத்தட்ட நூறு பூத்களில் ஒரு வாக்கு கூட வாங்காமல் பூஜ்ய நிலையை பெற்றுள்ளது அ.தி.மு.க.
எங்கப்பா யாரையும் காணோம்
தோல்வியால் பெரிதும் துவண்ட தினகரன், பின் ஒரு வழியாக கண்ணை துடைத்துவிட்டு ‘நண்பர்களே கவலை வேண்டாம். மீண்டும் வெடித்து எழுவோம்!' என்றபடியே திரும்பிப் பார்த்தால் அவரது இயக்கத்திலிருந்த பல முக்கிய தலைகள் எஸ்கேப் ஆகிவிட்டனர். தங்கதமிழ் செல்வன், இசக்கி சுப்பையா என்று ஆரம்பித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் பல முக்கிய நிர்வாகிகள் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடம் பெயர்ந்துவிட்டனர்.
யாருக்கு தெரியும்... அடுத்து என் மீதும் வழக்கு பாயலாம்... பரபரப்பை கிளப்பும் கே.எஸ். அழகிரி
3 பேர்தான்
இப்போதைக்கு தினகரனின் கையில் எஞ்சியிருப்பது வெற்றிவேல், பழனியப்பன், பெங்களூரு புகழேந்தி என வெகுவே வெகு சிலர் மட்டுமே. இவர்களில் புகழேந்தி கடந்த சில நாட்களாக பிசிறு அடிக்கும் வகையில் பேசி வருகிறார். அவர் எங்கே நகரப்போகிறாரோ? என்று தினகரன் அஞ்சி வரும் வேளையில், அடுத்த குண்டை தூக்கிப் போட்டுள்ளார் மாஜி அமைச்சரும், தினகரனின் வலது கரமுமான தருமபுரி பழனியப்பன்.
இரு கட்சிகளுக்கும் அழைப்பு
அதாவது இவரது வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்காக அந்த மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. என இரு முக்கிய கட்சியின் மிக முக்கிய தலைகளுக்கும் பத்திரிக்கை வைக்கப்படுகிறதாம். இது சமீபத்தில் தினகரனின் காதுகளுக்கு போனது. பிற நிர்வாகிகளிடம் அவர் விசாரித்தபோது ‘பழனி இரண்டு கட்சிகளுக்கும் ரூட் போடுறார். ஏதோ ஓண்ணுல சேரலாம்.' என்கிறார்களாம்.
அரசியல் வேறு
மிரண்டு போன தினகரன், பழனியப்பனிடமே இதுபற்றி கேட்டபோது "அரசியல் வேறு, பர்சனல் வேறு தானே தலைவரே. நான் மாற்றுக் கட்சியில் இருந்தாலும் சொந்த பந்தங்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துறதுதானே குடும்பத்துக்கு அழகு" என்று பொத்தாம் பொதுவாக பதில் தந்துவிட்டாராம்.
பதட்டம்
இருந்தாலும் பழனியப்பன் நிச்சயமாக கட்சியிலிருந்து சொய்ங்ங்.....கென வழுக்கி, விலகப்போகிறார் என மற்ற நிர்வாகிகள் கொளுத்திப் போடுவதால், விர்ர்ர்ரென கோபம் ஏறி நிற்கிறாராம் தினகரன்.
அடுத்த விக்கெட்டா?
- ஜி.தாமிரா