காரில் காத்திருந்த தினகரன்... ஓங்கி அடித்த ஹாரன்... ரூட் கிளியர்
சென்னை: சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு புறப்பட்ட டிடிவி தினகரனை சில நிமிடங்கள் காரிலேயே காத்திருக்க வைத்துவிட்டனர் தலைமைச் செயலக போக்குவரத்து காவலர்கள்.
சட்டமன்ற வெளிவாயிலில் இருக்கும் சிக்னலை நிறுத்தி சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், உள்ளிட்டோரின் வாகனம் செல்வதற்காக போக்குவரத்துக் காவலர்கள் வழியமைத்து கொடுப்பது வழக்கம். பொதுவாக சட்டமன்றத்தில் இருந்து ஒரு வாகனம் வெளியே வருகிறது என்றால், அதுவும் முக்கிய கட்சிகளின் தலைவர்களின் வாகனமோ, எம்.எல்.ஏ.க்களின் வாகனமோ என்றால் அந்த வாகனங்களை சட்டமன்ற வெளிவாயிலில் நிறுத்தாமல் அனுப்புவது வழக்கம். இந்நிலையில் டிடிவி தினகரன் காரை சில நிமிடங்கள் நேற்று நிறுத்தியிருந்தனர்.
ஓ.பி.எஸ்.பட்ஜெட் உரையை வாசித்துக்கொண்டிருந்த போதே 12.30 மணியளவில் சட்டமன்றத்தில் இருந்து புறப்பட்டுவிட்டார் தினகரன். செய்தியாளர்களை சந்தித்துவிட்டு புறப்பட்ட டிடிவி தினகரனை அமமுக நிர்வாகிகள் சிலர் காரில் ஏறிய பிறகும் சந்தித்து பேசிக்கொண்டு இருந்தனர். சரி தினகரன் புறப்பட்டு விட்டார் எனக் கருதி அவருக்காக சட்டமன்ற வெளிவாயில் முன் உள்ள சிக்னலை நிறுத்தியது போக்குவரத்து போலீஸ். ஆனால் தினகரன் கார் உடனடியாக புறப்படவில்லை. இதனால் அவர்கள் பொது போக்குவரத்துக்காக பச்சை சிக்னல் கொடுத்துவிட்டனர்.
அந்த நேரத்தில் தினகரன் கார் சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டது. அவருடைய காருக்கு முன்பு ஜெயா தொலைக்காட்சியின் பைலட் வாகனம் சென்றது. ஆனால் போக்குவரத்துக்காவலர்கள் அது பற்றி சட்டை செய்யவில்லை. பின்னர் டிடிவி தினகரனின் கார் ஓங்கி ஹாரன் அடித்த பின்னர் அவருக்கு ரூட் கிளியர் செய்யப்பட்டது. இதனிடையே எப்போதும் தினகரனுடன் ஒரு கும்பலே சட்டப்பேரவை கட்டிடத்திற்குள் சென்று பார்வையாளர்கள் மாடத்திற்கு செல்லும். நேற்றைய தினம் தினகரனுடன், முன்னாள் எம்.எல்.ஏ செந்தமிழன், மாவட்டச் செயலாளர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட நான்கைந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.