நாணயவியல் அறிஞர்... தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி காலமானார்
சென்னை : தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இன்று காலை காலமானார்.
முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஒரு நாணயவியல் அறிஞர் ஆவார். இவர் சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தவர். அதுதொடர்பாக பல ஆய்வுகளையும் செய்தவர் ஆவார்.
தினமலர் நாளிதழில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை முதன் முதலில் புகுத்தியவர். கணினி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியவர் என்ற பெருமையையும் கொண்டவர்.
தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது. தமிழுக்கு இவர் செய்த நற்பணியை பாராட்டி 2012-2013 ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் ராயல் நாணயவியல் கழகம் இவரை கவுரவப்படுத்தி, கவுரவ உறுப்பினராக அங்கீகரித்துள்ளது. சங்ககால நாணயங்களைத் தேடி, கண்டுபிடித்து, ஆராய்ந்து, தமிழர் நாகரிக வரலாற்றுத் தொன்மையை நிறுவியவர்.
தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் இரண்டாவது மகனான இவர் 1933 ம் ஆண்டு நாகர்கோவில் அருகே உள்ள வடிவீஸ்வரம் கிராமத்தில் பிறந்தவர். இவருக்கு வயது 88. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் இரங்கல்
மறைந்த தினமலர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உடலுக்கு நேரில் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி, இதழியல் துறையில் தனக்கான பாதையில் முத்திரை பதித்த தினமலர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மறைவு, தமிழ்ப் பத்திரிகையுலகுக்குப் பேரிழப்பாகும். அச்சு ஊடகத்தில் கணினிப் பயன்பாட்டை 1980-களின் இறுதியிலேயே கொண்டு வந்த முன்னோடி நாளிதழ்களில் முரசொலிக்கும் தினமலருக்கும் முக்கிய பங்கு உண்டு.
பத்திரிகையாளராக மட்டுமின்றி, நாணயவியல் ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட கிருஷ்ணமூர்த்தியின் ஆய்வுகளும், ஆதாரங்களும் இந்திய அரசின் செம்மொழித் தகுதி தமிழுக்குக் கிடைத்திட முத்தமிழறிஞர் கலைஞர் எடுத்த முயற்சிகளுக்குத் துணை நின்றன. இத்தகைய சிறப்புமிகு பணிகளுக்காகக் குடியரசுத் தலைவரால் தொல்காப்பியர் விருது வழங்கப் பெற்ற பெருமைக்குரியவர் கிருஷ்ணமூர்த்தி. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பத்திரிகைத் துறையினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.