"இங்க பாருங்க.. எவ்ளோ பெரிய குழி .. எங்கே அந்த அதிகாரி".. வீடியோ போட்டு திணறடித்த சிறுமி.. செம்ம!
திண்டுக்கல் சிறுமியின் வீடியோ வைரலாகி வருகிறது
சென்னை: "நான் என்ன கேட்கிறேன், எத்தனை வரி வாங்கறீங்க? வரி வாங்க தெரிஞ்ச உங்களுக்கு ஒரு அடிப்படை தேவையை செஞ்சு தர தோணலையா?" என்று சிறுமி ஒருத்தி அரசு அதிகாரிகளை கேள்வி கேட்கும் வீடியோ பரபரப்பை தந்து வருகிறது.
Recommended Video
திண்டுக்கல் கிருஷ்ணாராவ் 1-வது தெருவில், பாதாள சாக்கடைகள் சேதமடைந்துள்ளன.. அதனால் அந்த தெருவில் வசிக்கும் ஒரு சிறுமி, அந்த சாக்கடை முன்பு நின்று கொண்டு பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த குட்டி பெண், அதிகாரிகளை கேள்வி கேட்கிறாள்.. அவை எல்லாமே நியாயமான கேள்விகள்தான்.. வீடியோவில் சிறுமி பேசுவது இதுதான்:
சிறுமி
"வணக்கம், இது திண்டுக்கல் மாநகராட்சி... கிருஷ்ணாவ் முதல் தெரு, இந்த குழியை பாருங்க.. எவ்ளோ பெரிசா இருக்கு.. இந்த குழி மட்டும் இல்லை, இந்த தெருவுல இந்த மாதிரி ஏழெட்டு குழி இருக்கு.. இந்த குழி வழியாத்தான் நிறைய பேர் வர்றாங்க
கார்கள்
கார், பைக், இப்படி எல்லா பைக்கும்தான் வருது.. பைக் இப்படியே ஒரு ஓரமா கூட போயிடலாம்.. ஆனால், காரில் வர்றவங்கதான் ரொம்ப சிரமப்படறாங்க.. இதே மாதிரி ஏழெட்டு குழிகள், அந்த அதிகாரி வீட்டு முன்னாடி இருந்தால், ஆக்ஷன் எடுக்காம விடுவாங்களா? ஆக்ஷன் எடுப்பாங்க இல்லை? அதேமாதிரி இங்கேயும்..
எத்தனை வரிகள்?
எத்தனை வரி வாங்கறீங்க? வீட்டு, குழாய் வரி, பாதாள சாக்கடை வரி, ஏன் குப்பைக்கு கூட வரி.. இத்தனை வரி வாங்க தெரிஞ்ச உங்களுக்கு இந்த அடிப்படை தேவையை செஞ்சு தர தோணலையா? அதனால் இந்த மக்கள் இங்க இருக்கிற மக்கள் சார்பாக இந்த குழியெல்லாம் சரி செய்யணும்னு கேட்டுக்கறேன்" என்கிறாள். இந்த வீடியோவை பொதுமக்கள் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.
வைரல் பேச்சு
இதுமாதிரி பிரச்சனைகளுக்கெல்லாம் முன்பு போராட்டங்கள் பல நடத்தப்படும், இல்லையென்றால், அந்த பகுதி மக்கள் சேர்ந்து திரண்டு மறியல் நடத்துவார்கள், அல்லது ஆட்சியரிடம் ஒன்று கூடி போய் மனு தருவார்கள்.. இப்போதெல்லாம் அப்படி இல்லை.. இதோ, கேள்விகளை கேட்க குழந்தைகளே திரண்டு வந்துவிட்டார்கள்.. இனி ஒருத்தரும் தப்ப முடியாது போல!