நாங்க என்ன தாழ்த்தப்பட்டவர்களா? முதல் செருப்பை தலையில் வைத்து நடந்தவங்க வரை..சுழன்றடித்த சர்ச்சைகள்
சென்னை : செருப்பை தலையில் தூக்கி வைத்து நடந்தவர்களுக்கு மேயர் பதவி தந்து அழகு பார்த்தவர் முதல்வர் ஸ்டாலின் திமுகவைச் சேர்ந்த திண்டுக்கல் ஐ.லியோனி பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் கடந்த காலங்களில் திமுகவினர் பட்டியலின மக்கள் குறித்து பேசிய பதிவுகள் சமூக வலைதளங்களில் மீண்டும் பரப்பப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடி பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது .
இறந்து போன மூளை.. 5 பேரை காப்பாற்றிய 6 வயது குழந்தை.. நாட்டை உலுக்கிய
இதில் தலைமைக்கழக கொள்கை பரப்புச் செயலாளர் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
திண்டுக்கல் லியோனி
நிகழ்ச்சியில் பேசிய அவர்," சட்டையை கழட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு நடந்த சமூகத்தை, செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கி 'வணக்கத்திற்குரிய மாண்புமிகு மேயர்' அவர்களே என அழைக்க வைத்து திராவிட புரட்சியை செய்த தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார் என்றார்.
பெரும் சர்ச்சை
மேலும் "பெண்கள் அரட்டை அடித்துக் கொண்டு வெட்டியாக இருப்பார்கள் என்ற நிலையை மாற்றி பெண்களுக்கு ஓட்டுரிமைவாங்கித் தந்தது நீதிக் கட்சிஎன்றும் பெண்களுக்கு சொத்துரிமை வாங்கித்தந்தது கலைஞர் என்றும் பெண்களுக்கு அரசியலில் 50% இட ஒதுக்கீடு வழங்கியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் " என்றும், திண்டுக்கல் லியோனி பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக முக்கிய பிரமுகர்கள் கடந்த காலங்களில் பட்டியலின மக்கள் குறித்து பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் பரப்பப்பட்டு வருகிறது.
ஆர்.எஸ். பாரதி பேச்சு
சென்னை அன்பகத்தில் கடந்தாண்டு பிப்ரவரி 14ஆம் தேதியன்று நடந்த கலைஞர் வாசகர் வட்ட விழாவில் பேசிய ஆர்.எஸ். பாரதி, " இந்தியாவிலேயே தமிழகம் தலைசிறந்த மாநிலமாக இருக்கிறதென்று சொன்னால் அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம். வட மாநிலத்துல இருக்குறவனுக்கு அறிவே கிடையாது. ஓப்பனா சொல்றேன். ஒரு ஹரிஜன்கூட மத்தியப் பிரதேசத்தில ஹைகோர்ட் ஜட்ஜ் கிடையாது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" என்று பேசினார். இது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தயாநிதி மாறன் எம்பி
இதேபோல், கொரோனா காலத்தில் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி ஆகியோர் அப்போதைய தலைமை செயலாளர் சண்முகத்தைச் சந்தித்து வழங்கினார்கள். இந்தச் சந்திப்பின் போது தமிழக தலைமைச் செயலாளர் எங்களை அவமானப்படுத்தும்விதமாக நடந்துகொண்டார் என்று திமுக எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.
நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா?
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தயாநிதி மாறன் பேசுகையில், "எங்களை மூன்றாம் தரம் மக்களை போல நடத்தினார். நாங்கள் எல்லாம் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? நாங்கள் அவரைச் சந்தித்தபோது அவரது அறையில் தொலைக்காட்சிப் பெட்டி அலறுகிறது. தொலைக்காட்சி சத்தத்தை கூட அவர் குறைத்து வைக்கவில்லை. எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் நடந்துகொண்டார். திமுக தலைவரின் ஒன்றிணைவோம் வா திட்டத்தைப் பார்த்து அவர் பொறாமைப்படுகிறார்" என்று தயாநிதி மாறன் பேசினார். இந்நிலையில் திமுக எம்பி தயாநிதி மாறன், 'நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா'என்றது அதிர்ச்சியளிப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் என கூறியிருந்தார். தற்போது இந்த பேச்சுகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.