மு.க.ஸ்டாலினுடன் தினேஷ் குண்டுராவ் பேசியது என்ன...? 24 மணி நேரத்தில் திமுகவை குளிர்வித்த காங்கிரஸ்.!
சென்னை: தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார்.
சத்தியமூர்த்தி பவனில் தினேஷ் குண்டுராவ் பேட்டியளித்த போது தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி எனத் தெரிவித்திருந்த நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மத்திய அரசின் நடவடிக்கைகள், நடப்பு அரசியல் நிகழ்வுகள் பற்றி பேசப்பட்டுள்ளது.
பெரியார் சிலை அவமதிப்பு-மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை எப்போது புரிந்து கொள்வர்? ஸ்டாலின்
காங்கிரஸ் பொறுப்பாளர்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து சத்தியமூர்த்தி பவனுக்கு முதல்முறையாக கடந்த வியாழக்கிழமை வருகை தந்தார் அவர். மேலிடப் பொறுப்பாளர் என்ற முறையில் தமிழகத்தில் முதல் பயணம் மேற்கொள்வதால் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தினேஷ் குண்டுராவுக்கு தடபுடல் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அவரது காருக்கு பின்னால் அணிவகுத்தும் சென்றனர்.
அண்ணா அறிவாலயம்
திமுக தலைவரும் கூட்டணிக்கு தலைமை வகிப்பவருமான மு.க.ஸ்டாலினை நீங்கள் சந்தித்துப் பேசினால் நல்லா இருக்கும் என தினேஷ் குண்டுராவிடம் கே.எஸ்.அழகிரி எடுத்துக்கூறியிருக்கிறார். அதற்கென்ன சந்தித்தால் போச்சு என பதில் அளித்த குண்டுராவ், ஸ்டாலினிடம் நேரம் கேளுங்கள் எனச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டதை அடுத்து அண்ணா அறிவாயலத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நேரம் அளித்தார் ஸ்டாலின்.
சீட் பங்கீடு
முதல் சந்திப்பு என்பதால் இந்த சந்திப்பில் மத்திய அரசின் செயல்பாடுகள் மாநில அரசின் நடவடிக்கைகள் பற்றியே அதிகம் பேசப்பட்டிருக்கிறது. அதேபோல் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக மேற்கொண்ட தந்திரங்கள் பற்றியெல்லாம் குண்டுராவ் ஸ்டாலினிடம் எடுத்துக் கூறியிருக்கிறார். முதல் சந்திப்பிலேயே கூட்டணி இடப்பங்கீடு குறித்து பேசினால் அது சரியாக இருக்காது என கருதப்பட்டதால் அந்த விவகாரம் பற்றி அவ்வளவு ஆழமாக விவாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டணி ஆட்சி
தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என தினேஷ் குண்டுராவ் பேட்டியளித்த விவகாரம் கூட்டணியில் புயலைக் கிளப்பிய நிலையில் அது தொடர்பாக குண்டுராவ் ஸ்டாலினிடம் நேரடியாக பேசியிருக்கிறார். மேலும், தமது கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு விட்டதாக குண்டுராவ் விளக்கம் கூறியதைக் கேட்டு ஸ்டாலின் சிரித்துக்கொண்டாராம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி எனக் கூறிய 24 மணி நேரத்திற்குள் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவை குளிர்வித்துள்ளது காங்கிரஸ்.