காங்கிரஸ் தயவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது... திமுகவுக்கு குண்டு வீசும் தினேஷ் குண்டுராவ்..!
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலவரம் தெரியாமல் பேசி வரும் அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மீது திமுக அதிருப்தியில் உள்ளது.
திமுகவின் மனம் நோகாத வகையில் செயல்பட்டு வந்த முகுல் வாஸ்னிக் அண்மையில் மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டு தமிழகத்திற்கு தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டார்.
ஆனால் அவரோ தமிழக அரசியல் கள நிலவரம் புரியாமல் பேசி தமிழக காங்கிரஸ் கமிட்டியை தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளியுள்ளார்.
"பாஜக ஆபீசிலும், காஞ்சி மடம் அருகிலும் பழனிபாபா படம் பொறித்த கொடியை ஏற்றுவோம்".. தடா ரஹீம் அதிரடி
காங்கிரஸ் பொறுப்பாளர்
காங்கிரஸ் கட்சியில் நிலவிவரும் கோஷ்டிப்பூசலை தீர்க்கவும், கட்சி வளர்ச்சிப் பணிகளை கண்காணித்து அது தொடர்பான அறிக்கையை தலைமைக்கு அளிக்கவும் மேலிடப் பொறுப்பாளர்கள் என்ற பெயரில் அனைத்து மாநிலங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். ஒரு மாநிலத்தை சேர்ந்தவர் மற்றொரு மாநிலத்துக்கு பொறுப்பாளராக பணியமர்த்தப்படுவார். சுருக்கமாக புரியும் படி சொல்லவேண்டுமானால் உள்ளூர் ஆட்டக்காரர்களுக்கு இல்லாத மவுசு வெளியூர் ஆட்டக்காரர்களுக்கு இருக்கும் அல்லவா, அதைப்போல் வெளிமாநிலத்தில் இருந்து ஒருவர் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக சென்றால் அவருக்கு அந்த மாநில நிர்வாகிகள் கட்டுப்படுவார்கள் என்பது காங்கிரஸ் மேலிட நம்பிக்கை.
தினேஷ் குண்டுராவ்
சரி விஷயத்திற்கு வருவோம், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக இருந்த முகுல் வாஸ்னிக் இருந்த நிலையில் அவரது இடத்திற்கு புதிதாக வந்திருக்கிறார் கர்நாடகவை சேர்ந்த தினேஷ் குண்டுராவ். முகுல் வாஸ்னிக் தனக்கென ஒரு அணியை தமிழகத்தில் உருவாக்கிக் கொண்டு அவர்கள் சொல்படி நடப்பதாக எழுந்த புகரால் அவரை பந்தாடிவிட்டது காங்கிரஸ் தலைமை. இப்போது புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள தினேஷ்குண்டு ராவுக்கு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள பலம் மற்றும் பலவீனம் பற்றி இன்னும் முழுமையாக தெரியாது.
திமுகவுக்கு சவால்
ஆனால் அதற்குள் காங்கிரஸ் தயவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி கூட்டணிக் கட்சியான திமுகவை சூடாக்கி இருக்கிறது. முகுல் வாஸ்னிக்கை பொறுத்தவரை திமுகவின் மனம் அறிந்து செயல்படக்கூடியவர். அதேபோல் செய்தியாளர்கள் சந்திப்பில் மிக லாவகமாக பதில் அளிக்கக்கூடியவர். இந்நிலையில் தினேஷ் குண்டுராவ் எடுத்த எடுப்பிலேயே தடாலடி கருத்து தெரிவிப்பது திமுகவை சற்று புருவம் உயர்த்த வைத்துள்ளது.
தமிழகம் வருகிறேன்
இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி, மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் பெங்களூருவுக்கு சென்று தினேஷ் குண்டுராவின் இல்லத்திலேயே அவரை சந்தித்து வாழ்த்துக் கூறியதுடன் நடப்பு அரசியல் நிலவரம் பற்றியும் பேசியிருக்கின்றனர். அப்போது தாம் விரைவில் தமிழக வருவதாகவும் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிடுமாறும் அழகிரியிடம் தெரிவித்திருக்கிறார் குண்டு ராவ்.