அமித்ஷாவின் வித்தைகளில் கருத்து கணிப்பும் ஒன்று.. திட்டமிட்ட ஏற்பாடே.. கி.வீரமணி சாடல்
சென்னை: "அமித்ஷாவின் வித்தைகளில் கருத்து கணிப்பு என்பதும் திட்டமிட்ட ஏற்பாடாகவே இருக்க முடியும் என்றும், பல சிறிய கட்சிகளை மிரட்டி பாஜக கூட்டணியிடம் வரவழைக்கவே இந்த கருத்து கணிப்புகளின் உள்நோக்கம்" என்றும் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு வெளியான தேர்தல் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு சாதகமான முடிவுகள் வெளிவந்தன. இந்த கருத்து கணிப்பு குறித்து பலரும் கருத்துத் தெரிவித்தபோது, திக தலைவர் கி.வீரமணியும் கருத்து சொல்லி இருந்தார்.
"கருத்துக் கணிப்புகள் ராசிபலன் போன்றது. இந்தக் கணிப்புகளைத் தடை செய்ய வேண்டும். அல்லது தவறாகும் பட்சத்தில் வெளியிட்டவர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். வெறும் வாயை மெல்பவர்களுக்கு சிறிது அவல் கிடைத்தமாதிரிதான்' என்று சொல்லி இருந்தார்.
ஆட்சிக்கு ஆபத்து?.. சரிவை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. வார்னிங் நோட் அனுப்பும் வல்லுநர்கள்!
திட்டமிட்ட ஏற்பாடு
இப்போது மீண்டும் இந்த கருத்து கணிப்புகள் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த திங்கள்கிழமை அன்று செய்தித்தாள்களில், தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியான கருத்துக் கணிப்பு என்பது பாஜகவால் - ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட ஏற்பாடு என்பது, தற்போது வெளிவரும் பல்வேறு செய்திகள் மூலம் புரிய வருகிறது.
வெங்கய்ய நாயுடு
குடியரசு துணைத் தலைவரே மாறுபடுகிறார்
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூட அதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்பதை அவர் கூறிய கருத்து மூலம் எவரும் எளிதில் புரிந்து தெளிவடையலாம். "கருத்துக் கணிப்பெல்லாம் சரியாக வந்ததே இல்லை, அது வெறும் யூகம்தான்; அதை நம்பிடத் தேவையில்லை" என்று கூறியுள்ளார்.
மாயை விளம்பரம்
இத்தகைய கருத்துக் கணிப்புகளின் உள்நோக்கம்:
1. பல சிறிய கட்சிகளை மிரட்டி பாஜக கூட்டணியிடம் வரவழைக்கவே!
2. பங்குச் சந்தையில் ஏற்றம் என்று காட்டி ஒருவகை 'மாயை' விளம்பரம் - பிரதமர் மோடிக்கும், அவர் சார்ந்த பாஜகவுக்கும். அமித் ஷாவின் வித்தைகளில் இதுவும் திட்டமிட்ட ஏற்பாடாகவே இருக்க முடியும் என்பது. அல்லது வேறு ஏதாவது உள்ளடி வேலைகளுக்கு இது முன்னோட்ட பிரச்சார உத்தியாகக்கூட இருக்கக்கூடும்!
அதிருப்தி, வெறுப்பு
நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவையில் 17 தொகுதிகளில் வாக்குப் பதிவு எண்ணிக்கையை விட கூடுதலான வாக்குகள் வாக்குப் பதிவு எந்திரத்தில் பதிவானது எப்படி? புகார் செய்தும் பயனில்லை.மக்களின் கணிப்பு - ஆட்சியாளர் மீதுள்ள அதிருப்தி, வெறுப்பு என்று அரசுக்கு எதிரான மனநிலை இருக்கையில் முந்தைய இடங்களையோ, கூடுதல் இடங்களையோ அது பெறுவதென்றால், அதுவும் வியக்கத்தக்க வித்தையே" என, கி.வீரமணி தெரிவித்துள்ளார்.